கொல்கத்தா : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தன்னுடைய மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கிறது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி தற்போது ஐந்தாம் இடத்தில் இருக்கிறது.
இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியின் பக்கர் சமான் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். போட்டி முடிவடைந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் இன்றைய வெற்றிக்கு எங்கள் அணியின் அனைத்து வீரர்களுக்குமே சேரும் அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

பேட்டிங், பந்துவீச்சு, பில்டிங் என மூன்று துறைகளிலும் எங்களுடைய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். தொடக்க வீரர் ஃபக்கர் சமான் ஒரு 20 முதல் 30 ஓவர் வரை களத்தில் நின்றால் ஆட்டம் நிச்சயமாக எங்களுக்கு சாதகமாக மாறிவிடும் என்று எனக்கு தெரியும். இன்றைய ஆட்டத்தில் அவர் தன்னுடைய இயல்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். பக்கர் சமான் இவ்வாறு விளையாடுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம். இன்றைய போட்டியில் நாங்கள் நல்ல தொடக்கத்தை வெளிப்படுத்தினோம். பந்துவீச்சில் சாஹின் அப்ரிடி சிறப்பாக செயல்பட்டார். முதல் 20 ஓவருக்கு பிறகு வங்கதேச அணி வீரர்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

எனினும் எங்களுடைய முக்கிய பவுலர்கள் ஆட்டத்தின் நடுப்பகுதியில் விக்கெட்டுகளை எடுத்தார்கள். இதன் மூலம் எங்களுடைய வெற்றி சாத்தியமாயிற்று. எங்களுடைய பவுலர்கள் சரியான லெங்தில் இன்று பந்து வீசினார்கள். இதன் மூலம் எங்களுக்கு விக்கெட்டுகள் கிடைத்தது. இன்றைய ஆட்டத்தில் எங்களுக்காக ஆதரவாக குரல் கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாபர் அசாம் கூறினார்.