மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் பாதி அளவிற்கு கூட பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஊதிய ஒப்பந்தம் வழங்கவில்லை. பாபர் அசாமிற்கு ஆண்டுக்கு வெறும் ரூ.43.50 லட்சம் மட்டுமே ஊதிய ஒப்பந்தமாக பிசிபி வழங்கி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு பிசிசிஐ தரப்பில் ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படும். அந்த வகையில், பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் 4 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
அதில் ஏ ப்ளஸ் பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.7 கோடியும், ஏ பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.5 கோடியும், பி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவில் இடம்பெறும் வீரர்களுக்கு ரூ.1 கோடியும் ஊதியமாக வழங்கப்படும்.

பெரும்பாலும் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம்பெறும் வீரர்களுக்கு ஏ ப்ளஸ் மற்றும் ஏ பிரிவு ஒப்பந்தம் வழங்கப்படும். கடந்த ஆண்டு பிசிசிஐ வெளியிட்ட ஊதிய ஒப்பந்தப் பட்டியலில் ஏ பிரிவில் இருந்த ஜடேஜா, தற்போது ஏ ப்ளஸ் பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதன் மூலம் தற்போது ஏ ப்ளஸி பிரிவில் விராட் கோலி ,ரோகித் சர்மா, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகிய 4 வீரர்களின் ஆண்டு ஊதியம் ரூ. 7 கோடி ஆக உள்ளது.
அதேபோல் கே.எல்.ராகுல் ஊதியம் அதிரடியாக ரூ.5 கோடியில் இருந்து ரூ.3 கோடியாக குறைக்கப்பட்டது. அதேபோல், இந்தியன் டி20 அணிக்காக அவ்வப்போது விளையாடும் வீரர்களான சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, சாஹல் உள்ளிட்டோருக்கு சி பிரிவில் ரூ.1 கோடி ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டது. பிசிசிஐ ஊதிய ஒப்பந்தத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இடம்பெற்றார்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று பேசி வரும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த விவரங்கள் வெளியாகியுள்ளது. 2022 - 23ஆம் ஆண்டு சீசனில் பாகிஸ்தான் நாட்டுக்காக விளையாடும் வீரர்களுக்கு வெள்ளை பந்து - சிவப்பு பந்து ஆகிய 2 வகையான முதன்மை பிரிவுகள் அடிப்படையிலான ஊதிய ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதில் அண்மை காலமாக விராட் கோலிக்கு இணையான வீரர், விராட் கோலியின் சாதனைகளை தகர்க்க போகும் வீரர் என்று பாராட்டப்பட்டு வரும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் சம்பளம், விராட் கோலி வாங்கும் சம்பளத்தை விட 12 சதவீதம் குறைவாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் இந்திய அணியின் கடைசி ஊதிய ஒப்பந்தப் பிரிவான சஞ்சு சாம்சன் வாங்கும் சம்பளத்தில் சரிபாதி அளவிற்கு கூட பாபர் அசாமிற்கு வழங்கப்படவில்லை

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமிற்கு அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 1.25 மில்லியன் ஊதிய ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 12 மாதங்களுக்கு கணக்கிட்டால் இந்திய ரூபாய்படி 12 மாதங்களுக்கு ரூ.43.50 லட்சம் மட்டுமே ஊதியமாக உள்ளது. இதன் மூலம் ஊதியத்தில் இந்திய வீரர்களின் அருகில் ஏணி வைத்து பார்த்தாலும், பாகிஸ்தான் வீரர்களால் தொட்டு பிடிக்க முடியாது. பாகிஸ்தான் அணியின் முதன்மை பிரிவில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஹசன் அலி, ஷாஷீன் அப்ரிடி உள்ளிட்டோருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.