லாகூர்: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஐசிசி வெளியிட்ட விளம்பர போஸ்டரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவின் புகைப்படம் இடம்பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, ஐசிசி மற்றும் ஜெய் ஷாவிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், ஐசிசி விளம்பர போஸ்டரை வெளியிட்டது. அதுதான் இப்போது பாகிஸ்தானைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

ஐசிசி வெளியிட்டுள்ள அந்தப் போஸ்டரில் முன்னணி அணிகளின் கேப்டன்கள் இடம்பெற்றுள்ளனர். சூர்யகுமார் யாதவ் (இந்தியா), மிட்செல் மார்ஷ் (ஆஸ்திரேலியா), எய்டன் மார்க்ரம் (தென்னாப்பிரிக்கா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), தசுன் ஷனகா (இலங்கை) ஆகியோர் உள்ளனர்.
ஆனால், முன்னாள் சாம்பியனும், கிரிக்கெட் உலகின் முக்கிய அணியுமான பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா அந்தப் போஸ்டரில் இல்லை. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு (PCB) கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஆசிய கோப்பைத் தொடரின் போதும், ஆரம்பக்கட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் பாகிஸ்தான் கேப்டன் புறக்கணிக்கப்பட்டார். அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முறையிட்ட பிறகே அது சரிசெய்யப்பட்டது. தற்போது உலகக்கோப்பை போன்ற ஒரு பெரிய தொடரிலும் அதே அவமானம் நேர்ந்திருப்பது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
"டிக்கெட் விற்பனைக்கான போஸ்டரில் எங்கள் கேப்டனை ஐசிசி புறக்கணித்துள்ளது. ஆசிய கோப்பையில் நடந்ததைப் போலவே இப்போதும் நடந்துள்ளது," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் வேதனை தெரிவித்துள்ளன.
2024 டி20 உலகக்கோப்பையில் அமெரிக்காவிடம் தோற்று, குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியது. ஐசிசி தரவரிசையிலும் அந்த அணி முதல் ஐந்து இடத்தில் இல்லை. ஒருவேளை அணியின் மோசமான செயல்பாடு காரணமாகவே ஐசிசி அவர்களைப் புறக்கணித்ததோ என்ற கேள்வியும் எழுகிறது.