லாகூர்: 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியில், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி விளையாடுவதில்லை என முடிவெடுத்துள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த முக்கியமான ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் செல்ல மறுத்த காரணத்தினால், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு இந்த முடிவு வந்துள்ளது. சில பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கோரியிருந்தது. ஆனால், போட்டி அட்டவணையில் எவ்வித மாற்றமும் இல்லை என ICC திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இந்த புறக்கணிப்பு முடிவு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சல்மான் அலி அகாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இது அரசின் முழுமையான முடிவு என்றும், கிரிக்கெட் வீரர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) வழியாக அரசு அளிக்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவோம் என்று அகா கூறினார். அவர், "ஆம், நிச்சயமாக நாங்கள் இலங்கைக்கு செல்வோம். ஆனால் இது எங்கள் முடிவு அல்ல. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அரசு மற்றும் பிசிபி தலைவர் என்ன கட்டளையிடுகிறார்களோ, அதைத்தான் பின்பற்ற வேண்டும். அதன்பிறகே செல்வோம், அதைச் செய்வோம்," என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் அரசின் இந்த முடிவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளது. இத்தகைய புறக்கணிப்பானது கடுமையான விளைவுகளுக்கும், அத்துடன் அபராத நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என எச்சரித்த ஐசிசி தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் சில முக்கிய கருத்துகளை குறிப்பிட்டது. இதனிடையே பாகிஸ்தானை விளையாட வைக்க, ஐசிசி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.