துபாய்: 2025 ஆசிய கோப்பை இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டன் சல்மான் அலி ஆகா ஆப்கானிஸ்தான் அணி குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வியால் நொந்து போனார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று அணிகள் பங்கேற்று இருக்கும் முத்தரப்பு டி20 தொடர் ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில், பத்திரிகையாளர் ஒருவர் ஆப்கானிஸ்தான் அணியை "ஆசியாவின் இரண்டாவது சிறந்த அணி" என்று குறிப்பிட்டார்.

இதைக் கேட்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, லேசாகச் சிரித்தபடி ஒருவிதமான ரியாக்ஷன் கொடுத்தார். கேமராவில் பதிவான அந்த நொடி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, ஆசிய கிரிக்கெட்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு அடுத்து, பாகிஸ்தான் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது குறித்த பேச்சுக்களை கிளப்பி உள்ளது.
சமீப காலமாக ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி அபரிமிதமானது. 2024 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஜாம்பவான் அணிகளை வீழ்த்தி அரையிறுதி வரை முன்னேறியது. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில், பாகிஸ்தான் அணியை சென்ன மைதானத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.
ரஷித் கான் தலைமையில், அந்த அணி எந்த ஒரு பெரிய அணியையும் வீழ்த்தக்கூடிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால், தடுமாறி வரும் பாகிஸ்தானை விட, ஆப்கானிஸ்தானே சிறந்த அணி எனப் பல வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே அந்தப் பத்திரிகையாளர் கேள்வியை எழுப்பினார்.
பாகிஸ்தான் அணி தற்போது ஒரு மாற்றுக் கட்டத்தில் இருக்கிறது. பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் போன்ற மூத்த வீரர்கள் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டு, சல்மான் அலி ஆகா தலைமையில் ஒரு புதிய, இளம் அணி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 7 டி20 தொடர்களில் வெறும் 3-ல் மட்டுமே பாகிஸ்தான் வென்றுள்ளது. இந்தச் சூழலில், இந்தியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற அணிகளுடன் ஒரே குழுவில் ஆசியக் கோப்பையை எதிர்கொள்வது பாகிஸ்தானுக்கு பெரும் சவாலாக இருக்கும்.
ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியைப் பற்றி பத்திரிகையாளர் குறிப்பிட்டபோது, சல்மான் அலி ஆகாவின் முகத்தில் தோன்றிய அந்த லேசான புன்னகையும், முகபாவமும் பல அர்த்தங்களை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.
சிலர் அதை அவநம்பிக்கையின் வெளிப்பாடு என்றும், சிலர் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டதற்கான அறிகுறி என்றும் பதிவிட்டு வருகின்றனர். யுஏஇ-யில் தற்போது நடைபெறும் முத்தரப்பு தொடரில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் மோதுவதால், இந்தச் சர்ச்சை புன்னகைக்குக் களத்தில் யார் பதிலடி கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.