எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்.. ஆசிய கோப்பைக்கு பின் பாக். கேப்டன் புலம்பல்
துபாய் : ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தும் என தொடர் துவங்கும் முன்பு இருந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக அந்த அணி தோல்வி மேல் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இதையடுத்து, பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் கடும் விமர்சனத்தை வைத்து வருவதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நெருக்கடியில் உள்ளது.
தோல்விகளுக்கு தானே பொறுப்பேற்பதாக, இந்த தொடரில் சரியாக ரன் குவிக்காத கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் கூறியுள்ளார். மேலும், யாரும் அவசரப்பட வேண்டாம். நாங்கள் மீண்டு வருவோம் என கேட்டுக் கொண்டுள்ளார். ஆசிய கோப்பை தொடங்கும் முன்பு தலை நிமிர்ந்து நின்ற சர்ப்ராஸ் இப்போது கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளார்.

ஆசிய கோப்பைக்கு முன் சர்ப்ராஸ்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்கும் முன்பு, பலரும் பாகிஸ்தான் தான் தொடரை வெல்லும் என கணித்தனர். அதற்கு காரணமாக பாகிஸ்தான் சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது எனவும், தன் சொந்த மண் போன்ற ஐக்கிய அரபு நாட்டில் ஆடுகிறது என்பதையும்காரணமாக கூறினார்கள். இதனால், மகிழ்ச்சியில் இருந்த கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் தொடருக்கு முன் அளித்த பேட்டிகளில் நம்பிக்கை பொங்க பேசினார்.

ஆசிய கோப்பை தோல்விகள்
ஆசிய கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி, ஹாங்காங் அணியை எளிதாக வீழ்த்தியது. அடுத்து இந்திய அணியிடம் தோல்வி அடைந்தது பாகிஸ்தான். அப்போது அந்த அணியில் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது. அடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவர் வரை போராடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வென்று இருந்தால், பாகிஸ்தான் தொடரில் மீண்டு வந்திருக்கும். அடுத்து மீண்டும், இந்தியாவிடமும், அடுத்து வங்கதேசத்திடமும் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளது பாகிஸ்தான்.

தோல்விக்கு பின் புலம்பும் சர்ப்ராஸ்
இப்போது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், கேப்டன் சர்ப்ராஸ் புலம்பியுள்ளார். "நான் ஆறு நாட்களாக தூங்கவில்லை என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இப்போது யாரும் பதற்றமடைய வேண்டாம் என நான் கூறிக் கொள்ள விரும்புகிறேன். எங்கள் செயல்பாட்டிற்கு நிச்சயம் விமர்சனம் இருக்கும். ஆனால், எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்" என கெஞ்சி உள்ளார்.

உலகக்கோப்பைக்கு முன்
மேலும், "உலகக்கோப்பைக்கு கொஞ்ச காலம் உள்ளது. அதற்கு முன்பு சில தொடர்களில் ஆட உள்ளோம். முதலில் ஆஸ்திரேலியா, பின்பு நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக ஆட உள்ளோம். அதில் எங்கள் திறனை நாங்கள் சோதித்து, எங்கே தவறு செய்கிறோம் என பார்த்து மாற்றிக் கொள்வோம். உலகக்கோப்பைக்கு முன் நல்ல அணியோடு இருப்போம்" என அணியை விமர்சனத்தில் இருந்து பாதுகாக்கும் வேலையில் இறங்கி உள்ளார் சர்ப்ராஸ்.


Click it and Unblock the Notifications