இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் கேரி கிர்ஸ்டன், 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருடன் பாகிஸ்தான் அணியில் இருந்து நீக்கப்படுவார் என அந்த அணியின் முன்னாள் வீரர் பாஸித் அலி கூறி இருக்கிறார். 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி மிக மோசமாக செயல்பட்டது.
இரண்டு தொடர்களிலும் தான் பங்கேற்ற முதல் சுற்றிலேயே வெளியேறியது பாகிஸ்தான் அணி. இதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இரண்டு பயிற்சியாளர் முறையை கொண்டு வந்தது. டெஸ்ட் அணிக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் கில்லெஸ்பி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்கு 2011 உலகக் கோப்பை வாங்கி கொடுத்த பயிற்சியாளர் ஆவார். அதன் காரணமாகவே பாகிஸ்தான் அணி அவரை பயிற்சியாளராக தேர்வு செய்தது. ஆனால், பாகிஸ்தான் அணிக்குள் நடக்கும் மோசமான அரசியல் காரணமாக அவரால் அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை.
பாகிஸ்தான் அணிக்குள் மேலும், மேலும் விரிசல் பெரிதாகிக் கொண்டு செல்கிறது. இந்த நிலையில், அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடருடன் நீக்கப்படுவார் என பாஸித் அலி சுட்டிக்காட்டி இருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், "சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் வரை ஒருநாள் அணி மற்றும் டி20 அணியின் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் இருப்பார். அந்த தொடருக்கு பின் அவர் நீக்கப்படுவார். பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபியின் அரை இறுதிக்கு தகுதி பெற்றாலே மிகப் பெரிய சாதனை." என்றார்.
மேலும், "பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அரசியலிலும் கேரி கிர்ஸ்டன் தலையிட்டு விட்டார். ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு அணி அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் நன்றாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வீரர்கள் திறமையானவர்கள் தான். ஆனால், இங்கு ஒரு சரியான நடைமுறை தேவை. அதற்காகத்தான் இரண்டு பயிற்சியாளர்களை நியமித்து இருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு." என்று பாஸித் அலி கூறி இருக்கிறார்.