பாகிஸ்தான் மாற்றங்கள்
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்றது முதல் புதிய வடிவம் பெற்று வருகிறது. புதிய தலைவராக எஹ்சான் மானி பொறுப்பேற்றார். அதன் தொடர்ச்சியாக உள் அமைப்புகளிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பாகிஸ்தான் முன்னாள் துவக்க வீரர் மொஹ்சின் கான், கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முக்கிய கமிட்டி
அந்த கிரிக்கெட் கமிட்டியில் உறுப்பினர்களாக முன்னாள் கேப்டன்கள் வாசிம் அக்ரம் மற்றும் மிஸ்பா - உல் - ஹக் இருக்கிறார்கள். பாகிஸ்தான் மகளிர் அணி சார்பாக உரூஜ் மும்தாஜ் இடம் பெற்றுள்ளார். இந்த கமிட்டி இனி தேர்வுக் குழு மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இரண்டையும் மேற்பார்வை பார்த்து தேவையான ஆலோசனைகள் வழங்கும்.
பதவி நீட்டிப்பு பெற்றார்
இந்த கமிட்டி நியமிக்கப்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை வரை பதவி நீட்டிப்பு பெற்றார். மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் இளம் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். அவரை அணியில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளார் ஆர்தர்.
முட்டாள், கழுதை என்றார்
இதை மொஹ்சின் கான் விரும்பவில்லை என தெரிகிறது. ஆமிர் சமீப காலமாக பார்ம் அவுட் ஆகி இருக்கிறார். இதை பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மொஹ்சின் கான், மிக்கி ஆர்தரை "முட்டாள், கழுதை" என குறிப்பிட்டு மிக மோசமாக பேசியுள்ளார்.
அவரை சந்திக்க முடியாது
இதனால், மிக்கி ஆர்தர் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், பொதுமக்கள் முன்னிலையில் தன்னை மிக மோசமாக திட்டி விட்டார் என கடும் கோபத்தில் இருக்கிறார். கிரிக்கெட் கமிட்டி தலைவரான மொஹ்சின் கானோடு தான் இனி அணி தேர்வு உள்ளிட்ட விஷயங்களை மிக்கி ஆர்தர் ஆலோசிக்க வேண்டும். இந்த சூழலில், தன்னிடம் மொஹ்சின் கான் மன்னிப்பு கோராவிட்டால், அவரை தான் சந்திக்க முடியாது என ஆர்தர் அறிவித்துள்ளார்.
ஆர்தருக்கு ஏற்படும் பிரச்சனைகள்
தேர்வுக் குழு தலைவர் இன்சமாம் உல் ஹக் உடன் முகம்மது ஹபீஸை அணியில் தேர்வு செய்வது குறித்து ஆர்தர் சமீபத்தில் வாக்குவாதம் செய்தார் என செய்திகள் வெளிவந்தன. ஹபீஸ் எப்படியோ அணியில் இணைக்கப்பட்டு விட்டார். தற்போது முகம்மது ஆமிர் விஷயத்தில் மற்றொரு பிரச்சனை மிக்கி ஆர்தருக்கு ஏற்பட்டுள்ளது. மொஹ்சின் கான் மன்னிப்பு கேட்பாரா?