பெங்களூரு : ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடிய ஏழு போட்டிகளில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி வெறும் 3 வெற்றிகள் உடன் ஆறு புள்ளிகளை பெற்று தற்போது பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆனால் முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 400 ரன்கள் குவித்து இருக்கிறது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. இதற்கு பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் பாகிஸ்தான் சொதப்பலுக்கு இந்தியா தான் காரணம் என்பது போல் பேசியிருக்கிறார். ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான தோல்வியின் போது தில் தில் பாகிஸ்தான் பாடலை போடவில்லை என்று சின்ன பிள்ளை போல் புகார் தெரிவித்து இருந்தார்.
ஆனால் தற்போது அவர் சொன்ன புகார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எங்கள் அணிக்கு கடினமான சூழல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எங்களுக்கு மட்டும் மிக அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தது. இது எங்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் கொரோனா காலத்தில் ஒவ்வொரு வீரர்களும் எப்படி தனிமைப்பட்டு இருந்தோமோ அதே போல் தற்போது உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இருக்கிறோம்.
எங்கள் அணி வீரர்கள் தங்க வைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு ஹோட்டல் மாடியிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு இருப்பார்கள். நாங்கள் காலை உணவு சாப்பிட வேண்டுமென்றால் கூட ஒவ்வொரு வீரர்களும் தனி அறையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். எங்கள் அணி வீரர்கள் குழுவாக அடிக்கடி எப்போதுமே ஹோட்டலை விட்டு வெளியே சென்று வருவார்கள்.
ஆனால் இம்முறை எங்களால் அப்படி செல்ல முடியவில்லை. முன்பெல்லாம் சில வீரர்கள் விரும்பும் நேரத்தில் உணவு சாப்பிட வெளியே செல்வார்கள். ஆனால் தற்போது எங்களால் அப்படி செய்யவே முடியவில்லை. இது மிகவும் நெருக்கடியை எங்களுக்கு கொடுக்கிறது. இந்த பாதுகாப்பு நெருக்கடியால் எங்களால் மூச்சை கூட ஒழுங்காக விட முடியவில்லை. நாங்கள் பல நாட்டிற்கு சென்றிருக்கிறோம். ஆனால் இப்படி எங்களுக்கு ஏற்பட்டதில்லை. இந்தத் தொடரில் நாங்கள் மூன்று முறை மட்டும் தான் வெளியே சென்று ஹோட்டலில் சாப்பிட்டோம். அப்போதும் எங்களுடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள் என்று மிக்கி ஆர்த்தர் கூறியுள்ளார்.