மும்பை: 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. வங்கதேசம் உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. இது ஐசிசிக்கு பெரும் நிர்வாக மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும்.
இலங்கையின் கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் பிப்ரவரி 15, 2026 அன்று நடைபெறவிருந்த சர்வதேச ஆடவர் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் மறுத்துள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்க நிபந்தனையுடன் பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்த பிறகும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவிற்கான காரணம் குறித்து அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், வங்கதேசத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கும் என்று நம்பப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இருந்து தங்களது போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்றக்கோரியதால், வங்கதேசம் ஆடவர் டி20 உலகக் கோப்பையிலிருந்து நீக்கப்பட்டு, குரூப் சி-யில் ஸ்காட்லாந்து மாற்றாக சேர்க்கப்பட்டது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எந்த ஐ.சி.சி நிகழ்விலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாகும். இது உலகளாவிய பார்வையாளர்களை, விளம்பரதாரர் மற்றும் ஒளிபரப்பு வருவாயை உச்சக்கட்டமாக ஈர்க்கிறது. இந்த போட்டியை புறக்கணிப்பது ஐ.சி.சி-க்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
பி.சி.சி.ஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐ.சி.சி இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது 2027 வரை அனைத்து இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளும் ஐ.சி.சி நிகழ்வுகளில் நடுநிலையான மைதானங்களில் நடைபெறும் என்று உறுதி செய்கிறது.
பாகிஸ்தான் போட்டியில் களமிறங்காததால் இந்தியாவுக்கு முழு புள்ளிகள் கிடைக்குமெனினும், ஐ.சி.சி-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது நிதி அபராதங்களை விதிக்க அதிகாரம் உள்ளது. இந்த புறக்கணிப்பு மூலம் ஏற்கனவே உள்ள தொலைக்காட்சி ஒப்பந்தங்கள் காரணமாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஒளிபரப்பாளர்கள் இழப்பீட்டை கோரி ஐ.சி.சி-க்கு எதிராக நீதிமன்றம் செல்லலாம். அவ்வாறு நடந்தால், ஐ.சி.சி அந்த இழப்பீட்டு தொகையை பாகிஸ்தான் மீது சுமத்தி, எதிர்காலப் போட்டிகளில் இருந்து அத்தனையையும் தடை செய்யக்கூடும்.
“பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டாம் என்று முடிவெடுத்தால், ஐ.சி.சி பல தடைகளை விதிக்கும். இதில் எந்த ஒரு சர்வதேச அணியுடனும் இருதரப்பு தொடர்கள் நடைபெறாது, பி.எஸ்.எல் தொடரில் வெளிநாட்டு வீரர்களுக்கு என்.ஓ.சி கிடையாது, மற்றும் ஆசிய கோப்பை பங்கேற்பு கிடையாது” என்ற தண்டனைகள் விதிக்கப்படலாம்.
“பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியுள்ளதால், ஐ.சி.சி-யின் உறுப்பு வாரியங்கள் இருதரப்பு தொடர்களுக்காக பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய மறுக்கக்கூடும். பாகிஸ்தானுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் வழங்கப்படாமல் போகவும் வாய்ப்புள்ளது”
ஓய்வு பெற்ற வீரர்கள் தவிர, தற்போதைய வெளிநாட்டு சர்வதேச வீரர்கள் பி.எஸ்.எல் போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து தடை செய்யப்படலாம். இதை தவிர, ஐ.சி.சி-யின் ஒளிபரப்பாளர் ஜியோ-ஸ்டாருக்கு ஏற்படும் மில்லியன் கணக்கான டாலர்கள் வருவாய் இழப்பை பி.சி.பி ஈடுகட்ட வேண்டியிருக்கும். மேலும் ஐசிசி பாகிஸ்தானுக்கு தர வேண்டிய நிதியும் வராது.
பாகிஸ்தான் தனது உலகக் கோப்பை பயணத்தை பிப்ரவரி 7 அன்று நெதர்லாந்துக்கு எதிராகவும், பிப்ரவரி 10 அன்று அமெரிக்காவுக்கு எதிராகவும், பிப்ரவரி 18 அன்று நமீபியாவுக்கு எதிராகவும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறும்.
இந்த நடவடிக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடுமையான எதிர்வினைகளைத் தூண்டியது. பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அதிகாரிகள், நாட்டின் கிரிக்கெட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் இந்தியா நாக் அவுட் சுற்றுகளில் மோதினால் என்ன நடக்கும் என்பதை பி.சி.பி அல்லது அரசு இன்னும் தெளிவுபடுத்தவில்லை.