துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தி வரும் பாகிஸ்தான் அணி, 16 ஆண்டுகால சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் எந்த அணியும் செய்யாத மோசமான சாதனையை செய்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் ஒரு அணி குரூப் சுற்றிலேயே வெளியேறும் நிகழ்வு இரண்டாவது முறையாக நடந்துள்ளது.
முன்னதாக 2009 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய தென்னாப்பிரிக்க அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அதன் பின் 16 ஆண்டுகளில் அதுபோன்ற மோசமான நிகழ்வு எப்போதும் நடைபெறவில்லை. தற்போது பாகிஸ்தான் அணி தொடரை நடத்தும் நிலையில் குரூப் சுற்றுடன் வெளியேறி அந்த மோசமான சாதனையை செய்துள்ளது.

இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வி அடைந்து அரையிறுதி செல்லும் வாய்ப்பை தவறவிட்டது. அதனால் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேற உள்ளது. இந்த நிலையில்தான் இந்த மோசமான சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
மேலும், கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற ஒரு அணி அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறுவது நான்காவது முறையாக நிகழ்ந்துள்ளது. முன்னதாக 2002 சாம்பியன்ஸ் டிராபியை பகிர்ந்து கொண்ட இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 2004 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் சுற்றுடன் வெளியேறி இருந்தன.
அதேபோல 2009 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்த ஆஸ்திரேலியா அணி 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுடன் வெளியேறி இருந்தது. தற்போது இந்த பட்டியலில் பாகிஸ்தான் நான்காவதாக இணைந்து இருக்கிறது. 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்த பாகிஸ்தான் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் சுற்றுடன் வெளியேறி இருக்கிறது.
இந்தத் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி, அடுத்து இந்திய அணிக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 241 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த எளிதான இலக்கை இந்திய அணி 43வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றது. விராட் கோலி சதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.