இஸ்லாமாபாத்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் ஏற்று நடத்தியதால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு 739 கோடி ரூபாய் நஷ்டமானதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால் அதில் உண்மை இல்லை எனவும், பாகிஸ்தானின் எதிரியான இந்திய ஊடகங்கள் தான் அந்த செய்தியை பரப்பி வருகின்றன. தற்போது பாகிஸ்தான் ஊடகங்களும் அந்த செய்திகளை பரப்பி வருகின்றன என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த அதிகாரி ஆமீர் மிர் கூறியிருக்கிறார்.
இந்திய ஊடகங்களை பாகிஸ்தானில் எதிரி என அவர் சித்தரித்து இருப்பது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு நஷ்டம் என்ற செய்தி முதலில் பாகிஸ்தான் ஊடகங்களில் இருந்து தான் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. அதைத்தான் இந்திய ஊடகங்களும் வெளியிட்டன. ஆனால், ஆமிர் அதை மாற்றிக் கூறி இருக்கிறார்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு 869 கோடி ரூபாயை செலவு செய்திருந்தது. அதில் பெரும்பாலான தொகை பாகிஸ்தானில் உள்ள மூன்று கிரிக்கெட் மைதானங்களை புனரமைப்பதற்காக செலவிடப்பட்டது. அதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்புக்கு இந்த தொடரின் முடிவில் 52 கோடி மட்டுமே வருவாய் கிடைத்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
அதை மறுத்து இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு, தங்களுக்கு டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் மட்டும் இல்லாமல் கூடுதலாக சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடமிருந்து 300 கோடி ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும், தாங்கள் இதில் 1000 கோடி அளவுக்கு லாபம் ஈட்டப் போவதாகவும் கூறியுள்ளது.
இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஆமீர் மிர் பேசுகையில், "இந்திய ஊடகங்களின் சித்தரிப்பை வெளிப்படுத்துவதற்காகவே நான் இப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்து இருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்திருப்பதாக அவர்கள் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானின் எதிரியான இந்திய ஊடகங்கள் இந்த பொய்யை சொல்லி வருகின்றன. அதை நான் அழிக்கப் போகிறோம். இந்திய ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தி தற்போது பாகிஸ்தான் ஊடகங்களிலும் வெளியாகி வருகிறது. ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது."
"இந்த தொடருக்கான செலவினங்கள் அனைத்தையும் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு ஏற்றுக் கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பிற்கான வருமானம் டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்து இருக்கிறது. நாங்கள் தற்போது தணிக்கை செய்ததற்குப் பிறகு பார்க்கும்போது மேலும் 300 கோடி பாகிஸ்தான் ரூபாயை சர்வதேச கிரிக்கெட் அமைப்பிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்" என விளக்கம் அளித்திருக்கிறார்.
செய்தி சுருக்கம்