லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷாவுக்கு 72000 டாலர் (சுமார் 68 லட்சம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு விதிக்கப்பட்ட மிக அதிகப்படியான அபராதம் இதுவாகும். பாகிஸ்தானில் இருக்கும் பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரின் தொடக்க ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்றது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகப் பார்வையாளர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகளும், தற்போதைய பிரதபர் ஷாபாஸ் ஷெரீப்பின் உறவினரும், பஞ்சாப் முதலமைச்சருமான மரியம் நவாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு மைதானத்தில் அளிக்கப்பட்ட 'ராஜ மரியாதை' குறித்து நசீம் ஷா தனது எக்ஸ் தளத்தில், "லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு ராணிக்கு அளிக்கப்படுவது போன்ற மரியாதை இவருக்கு ஏன் வழங்கப்படுகிறது?" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தப் பதிவு பரவியதைத் தொடர்ந்து, நசீம் ஷா அதனை உடனடியாக நீக்கினார். மேலும், தனது கணக்கு முடக்கப்பட்டு மர்ம நபர்களால் அந்தப் பதிவு இடப்பட்டதாக விளக்கம் அளித்தார். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இதனை ஏற்கவில்லை. இது குறித்து லாகூரில் நடைபெற்ற 3 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முன் நசீம் ஷா ஆஜரானார். அங்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதுடன், தனது சமூக வலைதள பக்கங்களைக் கவனித்து வந்த மேலாளரை வேலையை விட்டு நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
நசீம் ஷாவின் இந்தச் செயல் அவரது மத்திய ஒப்பந்த விதிகளை மீறுவதாகக் கூறி, அவருக்கு 2 கோடி பாகிஸ்தான் ரூபாய் (68 லட்சம் இந்திய ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது நசீம் ஷாவின் ஒரு ஆண்டு ஊதியத்தில் 3-ல் 2 பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நசீம் ஷாவால் நீக்கப்பட்ட அந்த சமூக வலைதள மேலாளர் இனி எந்தப் பாகிஸ்தான் வீரருடனும் பணியாற்றக் கூடாது எனப் பிசிபி தடை விதித்துள்ளது.

இதற்கு முன்பு இம்ரான் கானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட வீரர் அமீர் ஜமாலுக்கு 4000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது நசீம் ஷாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தொகை பாகிஸ்தான் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளது. விளையாட்டு வீரர்கள் அரசியல் கருத்துகளைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.