இஸ்லாமாபாத்: பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் டிசம்பர் மாதம் முதல் பொறுப்பேற்க உள்ளார். இந்த நிலையில், அவர் தற்போது வகித்து வரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் ஒவ்வொரு முக்கிய உறுப்பினர் நாடும் சுழற்சி முறையில் தலைமை பொறுப்பை ஏற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த ஒருவர் தான் தலைமை வகிக்க முடியும். அந்த வகையில் ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு செல்வதால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது முறைப்படி பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த மொஹ்சின் நக்வி தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. , ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருப்பது ஒரு வகையில் பாகிஸ்தானுக்கு அடித்த அதிர்ஷ்டமாகவும் மாறி இருக்கிறது.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்த உள்ளது. இந்த சூழ்நிலையில் அந்த அமைப்புக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரமும் கிடைக்க உள்ளது. இது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருந்த ஆசிய கோப்பை தொடரின் போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என மறுத்து இருந்தது. அதே போல, இப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் பாகிஸ்தான் செல்ல முடியாது என இந்தியா மறுப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் அதிகாரமும் அதிகரித்து உள்ளது. அடுத்து 2025 ஆசிய கோப்பை இந்தியாவில் நடக்க உள்ளது. அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்தியாவை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும். 2023 ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பால் நடத்தப்பட்டது. அந்த தொடர் பாகிஸ்தானில் முழுமையாக நடத்தப்பட்டு இருக்க வேண்டும்.
எனினும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் ஒரு பகுதி தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டது. பாகிஸ்தான் அணி ஆடிய சில போட்டிகள் மட்டும் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்றது. அப்போது இலங்கையில் நடத்தப்பட்ட பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன. ஜெய் ஷாவின் முடிவால் தான் இந்த நிலை ஏற்பட்டதாக அப்போது கடுமையான விமர்சனங்கள் எழுந்து இருந்தன.
மேலும், தொடரை நடத்திய பாகிஸ்தான் இரண்டு நாடுகளில் தொடரை நடத்தியதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக ஜெய் ஷா மீது குற்றம் சுமத்தினர். இந்த விவகாரம் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அப்படியே நேர்மாறாக 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஆனால், அந்த தொடரை கட்டுப்படுத்தும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமை பொறுப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பை சேர்ந்த ஒருவர் இருக்கப் போகிறார். எனவே, பாகிஸ்தான் தங்கள் எதிர்ப்பை காட்டுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.