மும்பை: ஆசியக் கோப்பைத் தொடரின் முதல் போட்டியை காண வருமாறு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடம் உள்ளது. ஆனால் ஆசியக் கோப்பைத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்ல விரும்பாததால், நடுநிலையான இடத்தில் தொடரை நடத்த பிசிசிஐ கோரிக்கை வைத்தது. இதையடுத்து ஹைபிரிட் மாடலில் பாகிஸ்தானில் 4 போட்டிகளும், இலங்கையில் 9 போட்டிகளையும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் செப்.2ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கும் ஆசியக் கோப்பைத் தொடர் செப்.17ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பைத் தொடருக்கான தொடக்கப் பணிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மும்முரமாக உள்ளது. ஆகஸ்ட் 30ஆம் தேதி நடக்கும் ஆசியக் கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நேபாள் அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை முதல் போட்டியை காண வருமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் சங்க தலைவருமான ஜெய் ஷாவிற்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஐசிசி கூட்டத்தின் போதே ஜெய் ஷாவிடம் பிசிபி நிர்வாகம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க அழைப்பிதழை ஜெய் ஷா நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானிற்கு இந்திய அணியை பிசிசிஐ அனுப்பாத நிலையில், பிசிசிஐ நிர்வாகிகளாவது பாகிஸ்தான் செல்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் தரப்பில் பேசுகையில், அரசியல் வேறு, விளையாட்டு வேறு என்பதை எடுத்து காட்டும் இணைத்து பார்க்கவில்லை என்பதற்காக தான் ஜெய் ஷாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.