இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஏற்கனவே சர்வதேச தொடர்களில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதன் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமத்தை விற்க முடியாமல் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க உள்ளது.
பாகிஸ்தான் அணி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதுவரை அந்த தொடருக்கான சர்வதேச ஒளிபரப்பு உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பால் விற்க முடியவில்லை. முன்னதாக பாகிஸ்தானில் மட்டும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் மூன்று ஆண்டு உரிமத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு வெறும் 51 கோடி ரூபாய்க்கு விற்று இருந்தது.

அது தற்போது இருக்கும் சந்தையில் மிகவும் குறைந்த மதிப்பு ஆகும். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை 175 கோடி ரூபாய்க்கு விற்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திட்டமிட்டது. 2024 முதல் 2026 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கான ஒளிபரப்பு உரிமத்துக்கு 175 கோடி எதிர்பார்த்தது. ஆனால், எந்த நிறுவனமும் அதில் பாதி அளவு கூட அளிக்க முன்வரவில்லை.
இரண்டு பாகிஸ்தான் நிறுவனங்கள் இணைந்து 34 கோடி மட்டுமே அளிக்க முடியும் என கூறின. வில்லோ டிவி என்ற சர்வதேச கிரிக்கெட் ஒளிபரப்பு நிறுவனம் 18.75 கோடி ரூபாய் மட்டுமே அளிக்க முன் வந்தது. அவற்றை பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு நிராகரித்து விட்டது. அதன் பின் பல காலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அந்த உரிமத்தை விற்காமல் இருந்து வந்தது.
பின்னர் வெளிநாட்டு நிறுவனமான ஸ்போர்ட்ஸ் ஃபைவ், 65 கோடி அளிக்க முன் வந்தது. இதுவே வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமத்துக்கு கிடைத்த மிகப்பெரிய விலை ஆகும். ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு இந்த விலையையும் ஏற்கவில்லை. இதன் இடையே நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மகளிர் கிரிக்கெட் தொடர்களின் வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமைகளை மட்டும் 82 லட்சத்திற்கு விற்று இருந்தது.
தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமத்தை விற்க முடியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு தவித்து வருகிறது. மூன்று ஆண்டு ஒப்பந்தத்திற்கும் விலை கிடைக்கவில்லை. தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான வெளிநாட்டு உரிமைத்தையும் விற்க முடியவில்லை. அதனால் இக்கட்டான நிலையில் உள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் என்பதால் பாகிஸ்தான் ஆடும் போட்டிகளை இங்கிலாந்தில் ஒளிபரப்பி வரும் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொடருக்கான உரிமத்தை வாங்கும் என எதிர்பார்த்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு. ஆனால், அந்த நிறுவனம் உரிமத்தை வாங்க முன் வரவில்லை.
இந்த நிலைக்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாக தோல்வி அடைந்து வருவது தான் என கூறப்படுகிறது. 2023 ஆசிய கோப்பையில் சிறிய அணிகளிடமும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அடுத்து 2023 ஒரு நாள் போட்டி உலக கோப்பையிலும் அது தொடர்ந்தது. அதன் பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்கள் மற்றும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் என வரிசையாக பாகிஸ்தான் அணி தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது.
அதனால் பாகிஸ்தான் அணி மீது மற்ற நாடுகளில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பு இல்லை. அதன் காரணமாகவே வெளிநாட்டு ஒளிபரப்பு உரிமத்தை விற்க முடியாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு திண்டாடி வருகிறது. மறுபுறம் செப்டம்பர் 2023 முதல் மார்ச் 2028 வரையிலான நான்கரை ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட் அணி ஆடும் சர்வதேச போட்டிகள் மற்றும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் போட்டிகளின் ஒட்டுமொத்த ஒளிபரப்பு உரிமத்தை பிசிசிஐ 5,963 கோடி ரூபாய்க்கு வியாகாம் 18 என்ற ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு விற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.