கராச்சி : 2022 டி20 உலக கோப்பைக்கு பிறகு பாகிஸ்தான் அணி குறிப்பிடத் தகுந்த வகையில் எந்த ஒரு வெற்றியையும் பெறவில்லை. அதன் பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் தோல்வி, இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பையில் முதல் சுற்றில் இருந்து வெளியேறியது.
டி20 உலக கோப்பையில் அமெரிக்காவுடன் தோல்வி மற்றும் முதல் சுற்றிலிருந்து வெளியேறியது போன்ற பல இன்னல்களை பாகிஸ்தான் அணி சந்தித்தது. அது மட்டுமல்லாமல் யாருமே எதிர்பார்க்காத வகையில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

இப்படி பாகிஸ்தான் அணி அடி பாதாளத்திற்கு சென்றதற்கு காரணம் வீரர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததே என்று கூறப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் வெளிப்படையாகவே புகார் அளித்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் அணியில் இருக்கும் பிரச்சனைகளை சரி செய்ய அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அண்மையில் பாகிஸ்தான் அணியில் உள்ள நட்சத்திர வீரர்களை ஒருங்கிணைத்து சாம்பியன்ஸ் கோப்பை என்ற ஒரு உள்ளூர் தொடரை நடத்தியது.
இதில் பல பாகிஸ்தான் வீரர்களின் திறமை வெளிப்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் இருக்கும் வீரர்களுக்கு இடையே உள்ள பிரச்சனையை சரி செய்ய கனெக்சன் கேம்ப் என்று ஒரு முகாமை நடத்தியது. இதில் பாபர் அசாம், சான் மகசூத், சாகின் அப்ரிடி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்றனர். இதில் வீரர்களுக்கு இடையே என்ன பிரச்சனை இருக்கிறது? வீரர்கள் அதனை சரி செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?
உங்களுடைய மன குமுறல்களை வெளிப்படையாக கூறி பிரச்சனையை சரி செய்து கொள்ளுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்தது. அதன்படி வீரர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டனர். இந்த கனெக்ஷன் கேம்பில் டெஸ்ட் அணியின் பயிற்சியாளரான ஜேசன் கில்லஸ்பி, ஒரு நாள் டி20 அணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனும் கலந்துகொண்டு பாகிஸ்தான் அணியிடம் தாங்கள் என்ன எதிர்பார்க்கிறோம் என்பதை விவரித்தனர்.
இதேபோன்று கேப்டன் பதவியில் பாபர் அசாம் நீக்கப்படுவார் என்ற செய்தி வெளியான நிலையில் பாபர் அசாம் தொடர்ந்து கேப்டன் பதவியில் ஈடுபட அணியில் உள்ள முன்னணி வீரர்கள் ஆதரவு அளித்ததாக தெரிகிறது. இந்த ஆலோசனை கூட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர், வீரர்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனையை சரி செய்வதற்காக தான் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இதில் ஒவ்வொரு வீரர்களும் பாகிஸ்தான் அணிக்காக விளையாடுகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட நாங்கள் வலியுறுத்தினோம். மேலும் வீரர்களின் செயல்பாடுகளை எவ்வாறு அதிகரிப்பது? ஒரு அணியாக ஒருங்கிணைந்து எவ்வாறு விளையாடுவது என்பது குறித்து இந்த முகாமில் நாங்கள் வலியுறுத்தினோம் என்று கூறினார்,இதனிடையே பாகிஸ்தான அணி இங்கிலாந்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 7ஆம் தேதி முல்தான் நகரில் தொடங்குகிறது.