லாகூர்: பாகிஸ்தான் மண்ணில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை விளம்பரப்படுத்தும் நோக்கில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் தொடரை விளம்பரப்படுத்துவதற்குப் பதிலாக, இந்திய கிரிக்கெட் அணியை மறைமுகமாகக் கிண்டல் செய்யும் வகையில் அந்த வீடியோ அமைந்திருப்பது இரு நாட்டு ரசிகர்களிடையேயும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டது. ஆனால் அதில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தான் இப்போது பிரச்சனையாகி உள்ளது.

அந்த வீடியோவில், பாகிஸ்தானின் கலாச்சாரம், வீதிகள் மற்றும் விருந்தோம்பல் ஆகியவை அழகாகக் காட்டப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பாகிஸ்தான் வீதிகளில் மகிழ்ச்சியாக வலம் வருவது போலவும், அவர்களுக்குப் பாகிஸ்தான் மக்கள் அன்பான வரவேற்பு அளிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் வீடியோவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு ஆஸ்திரேலிய நபர் பாகிஸ்தானியர் ஒருவரைச் சந்திப்பார். அப்போது அந்த ஆஸ்திரேலியர் கைகுலுக்காமல் சாதாரணமாக இருப்பார். உடனே அந்த பாகிஸ்தானியர் சிரித்துக்கொண்டே, "என்ன கைகுலுக்க மறந்துட்டீங்களா? பார்க்கப்போனா நீங்க பக்கத்து வீட்டுக்காரங்க கிட்டயும் போயிட்டு வந்தீங்க போல" என்று கூறுவார்.
"பக்கத்து வீட்டுக்காரங்க" என்று அவர்கள் குறிப்பிடுவது இந்தியாவைத் தான் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் உறவு சுமுகமாக இல்லை. பல நேரங்களில் இரு அணி வீரர்களும் களத்தில் சந்திக்கும்போது கைகுலுக்கிக் கொள்வது கூட செய்தியாக மாறும் சூழல் உள்ளது.
சமீபத்தில் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கை குலுக்கிக் கொள்ளவில்லை என்பதை வைத்து, "இந்தியாவிற்குச் சென்று வந்தால் கைகுலுக்கும் பழக்கத்தையே மறந்துவிடுவார்கள்" என்ற அர்த்தத்தில் பாகிஸ்தான் வாரியம் இந்த வசனத்தை வைத்துள்ளதாக ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர்.
இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே இணையத்தில் பரவிவிட்டது. பாகிஸ்தான் ரசிகர்கள் இதை ஒரு நகைச்சுவையாகவும், தங்கள் நாட்டின் பெருமையைக் காட்டுவதாகவும் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், இந்திய ரசிகர்கள் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். "விளம்பரத்திற்காக இந்தியாவை இழுக்க வேண்டிய அவசியம் என்ன?" என்றும், "இந்தியாவின் பெயரையைப் பயன்படுத்தினால்தான் உங்கள் தொடருக்கே விளம்பரம் கிடைக்கும்" என்றும் இந்திய ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தங்கள் நாட்டில் சர்வதேச கிரிக்கெட் பாதுகாப்பாக நடக்கிறது என்பதையும், வெளிநாட்டு வீரர்களைத் தாங்கள் அன்பாக நடத்துகிறோம் என்பதையும் உலகிற்குச் சொல்லவே பாகிஸ்தான் வாரியம் இம்முயற்சியை எடுத்துள்ளது. ஆனால், அதில் இந்தியாவைத் தேவையில்லாமல் இழுத்து சர்ச்சையை உண்டாக்கி, அதன் மூலம் வீடியோவை பரப்ப நினைத்த அவர்களின் சந்தைப்படுத்தும் உத்தி இதில் வெளிப்படையாகத் தெரிகிறது.
களத்தில் திறமையை நிரூபித்து வெற்றிகளைப் பெறுவதில் கவனம் செலுத்துவதை விட, இதுபோன்ற வீடியோக்கள் மூலம் கவனத்தை ஈர்க்க பாகிஸ்தான் முயல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியமோ அல்லது இந்திய ரசிகர்களோ இதுபோன்ற சீண்டல்களைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்பதே உண்மை.