மும்பை : பாகிஸ்தானில் நடைபெற உள்ள 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்க தாங்கள் வரமாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணி அறிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள அரசியல் பிரச்சனை காரணமாக இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்தன.
வெறும் ஐசிசி ஆசிய கோப்பை போன்ற தொடர்கள் மற்றும் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி வர முடியாது என கூறிவிட்டது. இதனை அடுத்து ஹைபிரிட் முறையில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றது.

அதன்பிறகு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் முதலில் வர முடியாது என்று கூறிய நிலையில் பிறகு வேறு வழியில்லாமல் வந்து விளையாடியது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வந்ததால் இந்தியாவும் மீண்டும் பாகிஸ்தானுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அப்போதுதான் ஒரு ட்விஸ்ட் வைக்கப்பட்டது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கும் தாங்கள் வரமாட்டோம் என்று கூறிய பிசிசிஐ போட்டிகளை ஹைபிரிட் முறைப்படி துபாய் அல்லது இலங்கையில் நடத்தினால் வந்து விளையாடுவோம் என்று கூறி இருக்கிறது.இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மட்டுமல்லாமல் ஐசிசிக்கு பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்திருக்கிறது. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில் அந்தத் தொடருக்கு தாங்கள் வரப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு இந்தியா வரவில்லை என்றால் தாங்களும் இந்தியா செல்லப் போவதில்லை என அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்திருக்கிறது.
இதனால் டி20 உலக கோப்பையில் ஒருவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் வகையில் போட்டி அமைக்கப்பட்டால் இந்தியா வேறு நாட்டுக்கு சென்று விளையாடும் நிலை ஏற்படலாம். கிரிக்கெட் உலகில் அதிக ரசிகர்களை கொண்ட இரண்டு பெரிய நாடுகள் இப்படி மோதிக் கொள்வதால் யாரை சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் ஐசிசி விழி பிதுங்கி நிற்கின்றது.