துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில், இந்தத் தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியும் பங்கேற்காதது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது. இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பு (ஐசிசி - ICC) அது குறித்து அதிரடி விளக்கத்தை அளித்துள்ளது.
இந்திய அணி கோப்பையை வென்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷாவும், பிசிசிஐ தலைவர் ஸ்டூவர்ட் பின்னியும் கோப்பையை வழங்கினர். அதனால் இந்தத் தொடரை இந்தியாவே நடத்தியது போன்ற ஒரு பிம்பமும் ஏற்பட்டது.

ஏன் சர்வதேச கிரிக்கெட் அமைப்பு, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பைச் சேர்ந்த யாரையும் மேடைக்கு அழைக்கவில்லை? என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைவர் மொஹ்சின் நக்வி இறுதிப் போட்டி துபாய்க்கு செல்லவில்லை என்ற செய்தியும் வெளியானது.
இதை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களே விமர்சித்து வந்தனர். பாகிஸ்தான் தொடரை நடத்தும் நிலையில், அவர் இறுதிப் போட்டியில் பங்கேற்று பரிசளிப்பு விழாவை முன்னின்று நடத்தி இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டினர். ஆனால், மொஹ்சின் நக்வி பாகிஸ்தான் அரசிலும் அங்கம் வகிப்பதால், அவர் சில பணி நிமித்தமாக இறுதிப்போட்டியில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
அதற்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி சமீர் அகமது சையது துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவரை சர்வதேச கிரிக்கெட் அமைப்பு மேடைக்கு அழைக்கவில்லை. இதனிடையே சர்வதேச கிரிக்கெட் அமைப்பு இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கம் - "சர்வதேச கிரிக்கெட் அமைப்பு ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் அமைப்புகளின் தலைவர்களை மட்டுமே மேடைக்கு அழைப்பது வழக்கம். உதாரணமாக தலைவர், துணைத் தலைவர் அல்லது தலைமை நிர்வாக அதிகாரி ஆகியவர்களை மட்டுமே மேடைக்கு அழைப்போம். மற்ற அதிகாரிகள் அந்த இடத்தில் இருந்தாலும் அவர்களை மேடைக்கு அழைப்பதில்லை." என விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கத்தின் படியே பார்த்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி துபாயில்தான் இருந்துள்ளார். அவரை ஏன் அழைக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தற்போது கேள்வி எழுப்பி உள்ளனர்.