கொழும்பு: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் காண ரசிகர்கள் முன் வராததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமே காரணம் என்று இலங்கை ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொழும்புவில் உள்ள பிரேமதேச மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது திடீரென மழை குறுக்கீடு ஏற்பட்டது. தொடர்ச்சியாக 4 மணி நேரம் மழை பெய்ததால், ஆட்டம் ரிசர்வ் நாளான இன்று மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது பிரேமதேச மைதானத்தில் ரசிகர்களே இல்லாமல் இருந்தனர். ஆங்காங்கே சில ரசிகர்கள் மட்டுமே உற்சாகப்படுத்தினர். வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று தீர்ந்துவிடும். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் ஒட்டுமொத்த மைதானமே காலியாக இருந்தது.
இதற்கு டிக்கெட் கட்டண உயர்வே காரணம் என்று தெரிய வந்தது. ஏனென்றால் குறைந்தபட்ச டிக்கெட் விலையாகவே ரூ.6 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த நிலையில் மைதானம் காலியாக இருந்தது குறித்து இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் பேசுகையில், ஆசியக் கோப்பையை நடத்துவது பாகிஸ்தான் என்பதால், டிக்கெட் கட்டணங்களை நிர்ணயிப்பதும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தான்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் கட்டணங்கள் மிகவும் அதிகமாகும். ரூ.6 ஆயிரம் தொடங்கி ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இலங்கையில் பொருளாதார சிக்கல் உள்ளது. பிசிபி நிர்ணயித்துள்ள டிக்கெட் கட்டணம் இலங்கை குடும்பங்களின் ஒரு மாத ஊதியம். இவ்வளவு பெரிய டிக்கெட் கட்டணத்தை இலங்கை மக்களால் கொடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் டிக்கெட் விற்பனை மந்தமான நிலையில், கடைசி நேரத்தில் டிக்கெட் கட்டணம் ரூ.500 மற்றும் ரூ.1000 அளவிலும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களுக்கு இந்த கட்டண குறைப்பு சென்று சேராததால் ரசிகர்கள் பலரும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை நேரில் பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ரசிகர்கள் கடுமையான விமர்சித்து வருகின்றனர்.