இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணியின் வீரர்களுக்கு தண்டனை அளித்து, அபராதம் விதிப்பது போல விதித்து பின் அந்தப் பணத்தை பரிசுப் பணம் என்ற பெயரில் திரும்ப அளித்த பித்தலாட்ட நாடகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கடந்த சில சர்வதேச சுற்றுப்பயணங்களின்போது விதிகளை மீறியதற்காக சில வீரர்களுக்கு பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 30 லட்சத்திற்கும் அதிகமாக அபராதம் விதித்து பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், அந்த அபராதத் தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்ப அளித்து இருக்கிறது. அந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகி தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தற்போதைய பாகிஸ்தான் டி20 அணியின் கேப்டன் சல்மான் அலி ஆகா மற்றும் ஆல்ரவுண்டர் ஆமிர் ஜமால் உள்ளிட்டோர் ஒழுங்கு மீறல்களில் ஈடுபட்டதாக முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது. குறிப்பாக, ஆமிர் ஜமால் இங்கிலாந்து தொடரின்போது நிகழ்ச்சி ஒன்றில் "804" என்ற அரசியல் அடையாளம் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்ததற்காக 13 லட்ச பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளின்படி, வீரர்கள் பொதுவெளியில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது என்பதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது, சல்மான் அலி ஆகா, சயிம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் ஆகியோர் தங்கும் விடுதிக்கு தாமதமாக திரும்பியதற்காக தலா 5 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, தென்னாப்பிரிக்கா தொடரின்போது, சல்மான் அலி ஆகா, சயிம் அயூப், அப்துல்லா ஷஃபிக் மற்றும் அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் இரவு நேரத்தில் வெளியே சென்றதால் தலா 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்க தொடரில், ஷாஹீன் ஷா அப்ரிடி, தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேனை தடுத்ததற்காக, அவரது போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சவுது ஷகீல் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோர் டெம்பா பவுமா ஆட்டமிழந்தபோது எல்லை மீறி கொண்டாடியதற்காக, அவர்களுக்கு தலா 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இருப்பினும், தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அபராதத்தை ரத்து செய்து, அந்த தொகையை வீரர்களுக்கு திரும்ப வழங்கி இருக்கிறது. அதை நேரடியாக வழங்க முடியாது என்பதால் பரிசுப் பணம் என்ற பெயரில் அளித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றுடன் வெளியேறியதால், பாகிஸ்தான் அணி வீரர்களின் ஒழுக்கம் குறித்து மீண்டும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வீரர்களின் ஒழுக்கத்தை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அனால், தண்டனை அளித்து விட்டு மீண்டும் பரிசுப் பணம் என்ற பெயரில் திரும்ப அளித்தால் வீரர்கள் எப்படி ஒழுக்கமாக நடந்து கொள்வார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.