மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உச்சகட்ட பரபரப்பு சம்பவம் இன்று நடந்து அரங்கேறி இருக்கிறது. பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு கூட செல்ல முடியாமல் வெளியேறியது. இதை அடுத்து அந்த நாட்டு கிரிக்கெட்டிலும் பல மாற்றங்கள் நடந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வுக்குழு உறுப்பினராக வஹாப் ரியாஸ், அண்மையில் பதவியேற்றார். அவர்தான் தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு பாகிஸ்தான் அணியை தேர்வு செய்தார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் ஆலோசனை குழு உறுப்பினராக முன்னாள் வீரர் மற்றும் சர்ச்சைக்குரிய சல்மான் பட் நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் புகாரில் சிக்கிய சல்மான் பட்டுக்கு 5 வருடம் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சல்மான் பட் பல ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் அதிகார பொறுப்பில் அமர்ந்தார்.
இதனை அடுத்து சல்மான் பட் ஏன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் நியமிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே சல்மான் பட் அந்த பதிவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்வு குழு உறுப்பினர் வஹாப் ரியாஸ், மக்கள் என்னை குறித்தும் சல்மான் குறித்தும் தவறாக பேசி வருகிறார்கள்.
எனவே சல்மான் பட் ஆலோசகராக நியமிக்கப்பட்டதை நான் திரும்பப் பெறுகிறேன். இது குறித்து சல்மான் பட்டிடம் நான் ஏற்கனவே பேசி விட்டேன். இதுபோன்ற ஒரு பின்னணி உடைய வீரர் என்னுடைய குழுவில் இடம் பெற முடியாது என்பதை நான் கூறிவிட்டேன். பல ஊடகங்களும் விமர்சகர்களும் என்னையும் சல்மான் பட் உடன் இணைத்து பல விஷயங்களை பேசி விட்டார்கள்.
என்னை இந்த முடிவு எடுக்க அனுமதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது எந்த அழுத்தமும் இல்லை. நான் எடுத்த முடிவை நானே திரும்ப பெறுகிறேன். இந்தியாவை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் அசாருதீன் அஜய் ஜடஜாவெல்லாம் தற்போது கிரிக்கெட்டில் தான் இருக்கிறார்கள்.
அங்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. அங்கு இருக்கும் ஒரு கிரிக்கெட் வாரிய தலைவராகவே அசாருதீன் இருக்கிறார். அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தான் அணியின் பேட்டிங் ஆலோசராக இருக்கிறார். இதை பார்த்து தான் தாம் அந்த முடிவை எடுத்ததாக வகாப் ரியாஸ் கூறியுள்ளார்.