லாகூர்: இந்திய கிரிக்கெட்டிடம் பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் தலைமைத் தேர்வாளர் அகிப் ஜாவேத் வலியுறுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக அணியிலும் நிர்வாகத்திலும் தொடர் மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், சர்வதேச அளவில் பாகிஸ்தானின் செயல்திறன் மேம்படவில்லை என்பதே யதார்த்தம்.
கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பாளர்கள், தேர்வுக்குழு, கேப்டன்கள் மற்றும் வீரர்கள் என பல மட்டங்களிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தற்போதுதான் ஒரு நிலைத்தன்மை எட்டியுள்ளது. இந்தியாவின் வெற்றிகரமான அணுகுமுறையை பாகிஸ்தானில் அமல்படுத்த தாம் நினைத்ததாக ஜாவேத் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அகிப் ஜாவேத் "நான் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை பார்த்து அப்படியே அதை பாகிஸ்தான் கிரிக்கெட்டில் எடுத்துக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் செய்தேன். நான் இந்திய கிரிக்கெட் வெற்றியின் திட்டங்களை செயல்படுத்த விரும்பினேன். ஆனால் எந்த ஒரு நாட்டு கிரிக்கெட் டீம் வெற்றியும் அதன் தரத்தில் திறமையில்தான் இருக்கிறது."
"நீங்கள் யாரை வேண்டுமானாலும் தேர்வாளராகவோ பயிற்சியாளராகவோ அல்லது கேப்டனாகவோ கொண்டு வரலாம். ஆனால் உங்களிடம் தரமும் திறமையும் இல்லை என்றால் எந்த மாற்றமும் வரப்போவது கிடையாது. இந்த இரண்டு விஷயங்கள் தான் ஒரு நாட்டு கிரிக்கெட் வெற்றியின் அடிப்படையானது.இதற்கு சரியான உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு மற்றும் சிஸ்டம் இருக்க வேண்டும். இதெல்லாம் பாகிஸ்தானில் இல்லாததுதான் பிரச்சினையாக இருந்து வந்தது. தற்போது ஓரளவுக்கு சரியான திறமைகளை அடையாளம் கண்டு அணிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்." என்று ஜாவேத் கூறியுள்ளார்.
அண்டர் 19 ஆசிய கோப்பையில் இந்திய அணியை பைனலில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. பைனலில் பாகிஸ்தான் தொடக்க வீரர் சமீர் 113 பந்துகளில் 172 ரன்கள் விளாசினார். இந்த தொடரிலும் சமீர், 471 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். இது போன்ற திறமையான வீரருக்கு பாகிஸ்தான் சீனியர் அணியில் விரைவில் இடம் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வரும் நிலையில் ஜாவேத் இவ்வாறு கூறியுள்ளார்.