லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொஞ்சம் கூட மதிப்பதில்லை என முகமது அமீர் தெரிவித்துள்ளார். 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறிய பின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அமீர், பாகிஸ்தான் அணியில் திறமையான வீரர்கள் இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
,2026 டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று முடிந்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி அமீர் கடுமையாகப் பேசினார். அதில், "எங்களிடம் உண்மையான திறமை இல்லை. இப்போதைய வீரர்கள் திறமையானவர்கள் அல்ல. வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானை நடத்தும் விதத்தைப் பாருங்கள். ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து நம்முடன் விளையாட வரும்போது, அறிமுக வீரர்களையோ, பலவீனமான அணிகளையோ அனுப்பி வெல்கின்றன. அதுவே அவர்கள் நம்மை எவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது."

"எந்தவொரு அணியும் பாகிஸ்தானில் உள்நாட்டுத் தொடரில் விளையாட வரும்போது, சிறந்த அணியை அனுப்புவதில்லை. நம்மை எவ்வளவு சாதாரணமாகக் கருதுகிறார்கள் என்பதை இது காட்டுகிறது. பாகிஸ்தானை வலுவான அணியாகக் கருதினால், முழு பலம் கொண்ட அணியுடன் ஏன் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

"நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட வரும்போது, முழு பலத்துடன் வருகின்றன. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிராக சாதாரணமாக 'ஏ' அணியை மட்டும் அனுப்புகிறார்கள். இதுவே அவர்கள் நம்மை எப்படி மதிப்பிடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது," என்றார்.
2026 டி20 உலகக் கோப்பையில் சல்மான் அலி ஆகா தலைமையில் விளையாடிய பாகிஸ்தான், ஆறு போட்டிகளில் நான்கில் வென்றது. நெதர்லாந்தை கொழும்புவில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், அமெரிக்காவை 31 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. ஆனால், மூன்றாவது குரூப் ஏ போட்டியில் இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் அவமானகரமான தோல்வி அடைந்தது.
பிப்ரவரி 18 அன்று நமீபியாவை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இருப்பினும், சூப்பர் 8 சுற்றில் அவர்களின் பயணம் சவாலாகவே அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்திடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்ற பாகிஸ்தான், அரையிறுதிக்கு முன்னேற சவாலான சூழலை எதிர்கொண்டது. நிகர ரன் ரேட்டில் நியூசிலாந்தை விஞ்ச, இலங்கைக்கு எதிரான கடைசி சூப்பர் 8 போட்டியில் குறைந்தது 65 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்க வேண்டும். ஆனால், அந்த இலக்கை எட்டத் தவறியதால், அரையிறுதி வாய்ப்பை இழந்தது.