லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் ஏமாற்றமளிக்கும் வகையில் வெளியேறிய நிலையில், அந்நாட்டு மருத்துவக் குழு அதிர்ச்சித்தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. நட்சத்திர வீரர்களான பாபர் அசாம் மற்றும் ஃபகர் ஜமான் இருவரும் உலகக் கோப்பையின் போது முழு உடற்தகுதியுடன் இருக்கவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இருவரும் உடல்தகுதியை மீட்க சிகிச்சையில் உள்ளதோடு, வங்கதேச சுற்றுப்பயணத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் ஆகிப் ஜாவித் கடந்த வாரமே இப் பிரச்சனையைச் சுட்டிக்காட்டி, வாரியம் இதுகுறித்து விசாரிக்கும் எனக் கூறியிருந்தார். ஜனவரியில் பி.சி.பி. மருத்துவக் குழுவில் இயக்குநராக இணைந்த UK விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஜாவேத் முகல், உலகக் கோப்பைக்குப் பின் இரு வீரர்களையும் பரிசோதித்து தனது கவலைகளைத் தெரிவித்தார்.

உலகக் கோப்பைக்குப் பிந்தைய தேசிய டி20 சாம்பியன்ஷிப்பில் ஹாம்ஸ்ட்ரிங் தசைப்பிடிப்பு காரணமாக பாபர் அசாம் பங்கேற்கவில்லை. ஃபகர் ஜமானும் இதேபோன்ற உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டார். "பாபரின் காயம் தீவிரமானது, ஃபகர் பல மாதமாக இப் பிரச்சனையால் சிரமப்பட்டு வருகிறார்" என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

தேசியத் தேர்வுக் குழு, பாகிஸ்தான் அணியின் உடற்பயிற்சியாளர் கிளிஃப் டீக்கனிடமிருந்து உடற்தகுதிச் சான்று பெற்ற பின்னரே பாபர், ஃபகர் உலகக் கோப்பை அணிக்குத் தேர்வு செய்யப்பட்டதாக மருத்துவக் குழுவிடம் தெரிவித்தது. சிறிய காயங்களுடன் வீரர்களை நெருங்கிய உறவு காரணமாக டீக்கன் முன்னர் விளையாட அனுமதித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாபர் அசாம் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவக் குழுவின் மேற்பார்வையின் கீழ் சிகிச்சையில் உள்ளார். மார்ச் 26 அன்று தொடங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் சல்மியை வழிநடத்த அவர் முழு உடற்தகுதியுடன் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஃபகர் ஜமான் சமீபத்தில் ஒரு தேசிய டி20 கோப்பை போட்டியில் பங்கேற்றார். வங்கதேசத்துக்கு எதிரான 50 ஓவர் தொடருக்கு உடற்தகுதி இல்லை என்றாலும், டி20 போட்டிகளுக்குத் தயாரானதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இரு வீரர்களும் நீக்கப்பட்ட வங்கதேச சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

காயப் பிரச்சனை வெளிவருவதற்கு முன்னரே, உலகக் கோப்பையில் பாபரின் மோசமான ஃபார்ம் காரணமாக அவரை அணியிலிருந்து நீக்குவதற்கான திட்டங்கள் இருந்ததாகவும் தேர்வுக் குழுவினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.