லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் மோசமாக செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்பு இருக்கிறது. ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பை, 2024 டி20 உலக கோப்பை என பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்ந்து முதல் சுற்றிலே வெளியேறியது.
இதனால் அந்த அணி ரசிகர்களை சோகம் அடைய செய்திருக்கிறது.
50 ஓவர் உலகக் கோப்பையை தோற்ற பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பாபர் அசாம் மீண்டும் ஆறு மாதத்திற்குள் கேப்டன் ஆனார். மேலும் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி பிளவு பட்டு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நக்வி, பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை அழைத்து விசாரணை நடத்த இருக்கிறார். அதில் பாகிஸ்தான் அணியில் என்ன பிரச்சனை இருக்கிறது? என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.
அப்போது பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அணியில் இருக்கும் அரசியலை சொல்லி இருக்கிறார்.
பாகிஸ்தான் அணி இரண்டு பிரிவுகளாக இருப்பதாகவும் அதில் கேப்டன் பாபர் அசாம் அணியில் அரசியலை செய்வதாகவும் குற்றம் சாட்டி இருக்கிறார். இதைப் போன்று தேர்வுக்குழு தலைவர் வகாப் ரியாசும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நக்வியை சந்தித்து அவருடைய கருத்துக்களை கேட்டு அறிந்திருக்கிறார்.இது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து சுமார் 30 முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் பலரும் பாகிஸ்தான் அணியில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்களின் உடல் தகுதியை கண்காணிக்கவும் வீரர்கள் அலட்சியமாக ஆடுவது குறித்து என்ன செய்ய வேண்டும் என்றும் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற பாகிஸ்தான் அணி எந்த மாற்றங்களை செய்ய வேண்டும் என்பது குறித்தும் முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தற்போது பாபர் அசாம் உள்ள நிலையில் குறைந்தபட்சம் t20 கிரிக்கெட்டிலாவது அவருடைய பதவி பறிபோகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் புதிய கேப்டன் யார் என்ற அறிவிப்பு குறித்து இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் எனும் தெரிகிறது.