கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கவுதம் கம்பீரை போன்ற பயிற்சியாளர் தான் தேவை என்று முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். முகத்திற்கு நேராக விமர்சிக்கக் கூடிய கம்பீரை போன்ற பயிற்சியாளர் இருக்கும் போது, வீரர்களும் எளிதாக மாற்றங்களுக்கு பழகி கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது. இதன்பின் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்துள்ளார். கவுதம் கம்பீர் கண்டிப்பான பயிற்சியாளர் என்பதோடு, வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லக் கூடியவர். அதேபோல் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாட வைப்பவர்.

ஐபிஎல் தொடரிலேயே ஒரு வீரரை கம்பீர் நம்பினால், கடைசி வரை அந்த வீரரை கைவிட மாட்டார். அதேபோல் பிடிவாதம் குணம் கொண்ட கம்பீர், பயிற்சியாளர்கள் குழுவையும் தனது விருப்பப்படி கொண்டு வந்தார். அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு புதிய பயிற்சியாளர்கள் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு கேரி கிறிஸ்டனையும், டெஸ்ட் அணிக்கான பயிற்சியாளராக ஜேசன் கில்லஸ்பியையும் நியமனம் செய்துள்ளனர்.
ஆனாலும் பாகிஸ்தான் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா பேசுகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உள்ள அனைவரும் அனைத்து விஷயங்களையும் சாதாரணமாக எடுத்து கொள்கிறார்கள். அதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியின் சரிவு தொடங்கியது என்று சொல்வேன். இதனால் ஏராளமான கேப்டன்கள் உருவாகினார்கள்.
கேப்டனை மாற்றுவதால் எந்த பிரச்சனைக்கும் தீர்வு கிடைக்காது. அதனால் ஒரே கேப்டனை நியமித்து அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஒருவரை நியமனம் செய்தால், ஓராண்டு அவருக்கு நேரம் கொடுக்க வேண்டும். அதுவரை அந்த கேப்டனை எந்த கேள்வியும் கேட்க கூடாது. ஓராண்டுக்கு பின் அணியில் உள்ள பிரச்சனைகள், தோல்விகளுக்கான காரணங்கள் குறித்து கேள்வி கேட்கலாம். ஒருவரின் ஆதரவு முழுமையாக ஆதரவு இருந்தால், அந்த கேப்டனிடமும் யாராலும் கேள்வி கேட்க முடியாது.
அதேபோல் நன்றாக விளையாடி வெற்றிபெற கட்டாயமும் ஏற்படும். சில நேரம் ஓராண்டு முடிவடைந்த போதும் சூழல் சரியாகவில்லை என்றால், பின்னர் நீக்கம் தொடர்பான முடிவை எடுக்கலாம். மற்ற அணிகள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதை பாகிஸ்தான் அணி நிர்வாகம் பார்க்க வேண்டும். எப்படி இந்திய அணியால் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது? அவர்களுக்கான ராகுல் டிராவிட் சிறப்பாக பணியாற்றி சென்றுள்ளார். தற்போது அந்த இடத்திற்கு கவுதம் கம்பீர் வந்திருக்கிறார்.
அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதோடு மிகச்சிறந்த மனிதரும் கூட. அவரின் முகத்திலேயே எப்படி விளையாட வேண்டும் என்பதை காட்டிவிடுவார். எந்த வீரரின் முதுகிற்கு பின்னால் சென்று பிரச்சனைகளை உருவாக்காமல், முகத்திற்கு நேராக நின்று கேள்வி கேட்பார். அப்படிதான் ஒரு பயிற்சியாளர் இருக்க வேண்டும். வலிமையானவராக நேர்மையானவராக இருக்க வேண்டும். கடினமான முடிவுகளை கூட முகத்திற்கு நேராக எடுக்கும் பழக்கம் இருக்க வேண்டும். முதுகிற்கு பின் நின்று பேசுபவராக இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.