சென்னை : ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி தற்போது 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை வந்துள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு வந்த பாகிஸ்தான் வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி, இரண்டு போட்டிகளில் தோல்வி என தற்போது 4 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இந்த நிலையில் முக்கிய போட்டியில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் அணி தற்போது சென்னை வந்திருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் திங்கட்கிழமை ஆப்கானிஸ்தானையும் அதன் பிறகு வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவையும் பாகிஸ்தான் வீரர்கள் எதிர்கொள்ள உள்ளனர். ஹைதராபாத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு ரசிகர்களால் அளிக்கப்பட்டது.
ஆனால் அகமதாபாத் சென்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு பல கசப்பான சம்பவங்கள் நடந்தது. ரசிகர்கள் மத ரீதியிலான முழக்கங்களை எழுப்பி பாகிஸ்தான் வீரர்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்திருந்தார்கள். இந்த நிலையில் பெங்களூரில் பாகிஸ்தானுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கப்பட்டாலும் மைதானத்தில் பார்வையாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
மேலும் அங்கு வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்களுக்கும் பல கெடுபிடிகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் சென்னை வந்துள்ள பாகிஸ்தானுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்திருக்கிறார்கள். ஏற்கனவே அகமதாபாத்தில் பாகிஸ்தான் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு சாரி பாகிஸ்தான் என தமிழக ரசிகர்கள் தான் மன்னிப்பு கேட்டு டிரெண்ட் செய்தனர்.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நல்ல வரவேற்பையும் ஆதரவையும் கொடுக்க வேண்டும் என தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள். பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கு டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையாகி உள்ளன. பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு எப்போதுமே சென்னை ரசிகர்கள் தனி மரியாதையும் வரவேற்கும் கொடுப்பார்கள்.
இந்த நிலையில் பல கசப்பான சம்பவங்களை பார்த்து வந்திருக்கும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு அன்பு என்றால் என்ன விருந்தோம்பல் என்றால் என்ன என்பதை காட்ட தயாராக சென்னை இருக்கிறது.பாகிஸ்தான் வீரர்கள் தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.