மும்பை : பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தற்போது போதாத காலமாக இருக்கிறது. அந்த அணி கடந்த சில வருடங்களாகவே எந்த ஒரு குறிப்பிட்ட தகுந்த வெற்றியின் பெறாமல் தவித்து வருகின்றன. ஆசியக் கோப்பையில் தோல்வி, 2023 உலக கோப்பையில் முதல் சுற்றிலே வெளியேற்றம்.
டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணியிடம் தோல்வி மற்றும் முதல் சுற்றிலேயே ஊருக்கு திரும்பியது என பல தோல்விகளை தழுவி வந்தனர். இதைவிட மோசமாக தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக முதல் தோல்வியை டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் தழுவி இருக்கிறது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது உலகம் முழுவதும் இருந்து கடும் விமர்சனம் கிளம்பி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஆசிப் அந்த அணியை கடுமையாக சாடியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணியிடம் நாம் தோல்வியை தழுவினோம். இது வரலாற்றில் முதல் முறை. அமெரிக்க அணி போட்டியை நடத்துகிறது என்ற ஒரே காரணத்திற்காக தான் டி20 உலக கோப்பையிலேயே அவர்கள் விளையாடினார்கள். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் தகுதி பெறாத ஒரு அணியிடம் தான் பாகிஸ்தான் தோல்வியை தழுவி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இருக்கும் நிலைமையை பார்த்தால், அடுத்த டி20 உலக கோப்பையிலும் அமெரிக்க அணியிடம் பாகிஸ்தான் தோற்க நேரிடும். 2026 டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு நாம் கேப்டனை மாற்ற வேண்டும். பயிற்சியாளர், வீரர்கள் என அனைவரையும் மாற்றுங்கள்.
இந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை தீட்டி அணியை மாற்ற வேண்டும். இந்த 20 வீரர்கள் மட்டும் போதும். இவர்களை வைத்து நாங்கள் விளையாடுகிறோம் என்று இப்போதே முடிவு செய்யுங்கள். தொடர்ந்து பாகிஸ்தான் அணி ஒரே தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்கிறது. இதனால்தான் நான் மீண்டும் இந்த கருத்தை சொல்கின்றேன் என்று முகமது ஆசிப் கூறினார்.