லாகூர் : பிரபல கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியாவின் பெயர் சாதனை புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியா போன்று மதச்சார்பற்ற நாடாக இல்லாமல் இஸ்லாமிய நாடாக பாகிஸ்தான் விளங்குகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டேனிஸ் கனேரியா என்ற ஹிந்து வீரர் விளையாடினார்.பாகிஸ்தானுக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 261 விக்கெட்டுகளையும், 18 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்களையும் டேனிஸ் கனரியா வீழ்த்திருக்கிறார்.

இந்த நிலையில் டேனிஷ் கனேரியா இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் போது பிக்சிங் செய்து சிக்கிக்கொண்டார். இதனால் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இதனை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணிமீது பல்வேறு குற்றச்சாட்டுகளை டேனிஷ் கனேரியா கூறி வருகிறார். தாம் அணியில் விளையாடிய போது அப்போதைய கேப்டனாக இருந்த ஆப்ரிடி, தம்மை மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் தாம் ஹிந்து என்பதால் தம்மை சரிசமமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் நடத்தவில்லை என்றும் தன் மீது வீண் பழி சுமத்தி ஓரங்கட்ட முயற்சி செய்வதாகவும் டேனிஸ் கனேரியா குற்றம் சாட்டி வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வி தழுவியது. அப்போது ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்று ஒரு புள்ளி விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் வசிம் அக்ரம், இம்ரான் கான் போன்ற ஜாம்பவான்கள் வீரர்கள் பெயர் எல்லாம் இடம் பெற்றிருந்தது. ஆனால் இதில் டேனிஷ் கனேரியாவின் பெயர் இடம் பெறவில்லை. இது குறித்து சமூக வலைத்தளத்தில் குற்றம் சாட்டி உள்ள கனரியா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்யும் அநியாயத்தை பாருங்கள். நான் ஐந்து போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியாவில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன்.
ஆனால் என்னுடைய பெயர் இந்த சாதனை புத்தகத்தில் இடம் பெறவில்லை. பாகிஸ்தானில் எந்த அளவுக்கு மத வேறுபாடு கடைபிடிக்கிறது என்பதற்கு நான் ஒரு வாழும் உதாரணம் என்றும் டேனிஷ் கனேரியா குற்றம் சாட்டியுள்ளார். பாகிஸ்தான கிரிக்கெட் வாரியத்தின் இந்த செயலுக்கு பல தரப்பிலிருந்து கண்டனம் எழுந்துள்ளது.