பாகிஸ்தான் வீரருக்கு 2 ஆண்டு தடை.. 10 லட்சம் ரூபாய் அபராதம்.. காரணம் ஃபிக்சிங் கிடையாது
மும்பை: பாகிஸ்தான் வீரரான ஹம்சா நசருக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட இரண்டு ஆண்டுகள் தடையும், 10 லட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதத்தையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விதித்துள்ளது. பிசிபி மூலம் விசா விண்ணப்பிக்கும் போது, அவர் தவறான தகவல்களை வழங்கியதாக நடத்தப்பட்ட விசாரணையில் உறுதியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் உள்நாட்டு கிரிக்கெட்டில் சியால்கோட் ஸ்டாலியன்ஸ் அணிக்காக களமிறங்கும் ஆல்-ரவுண்டர் ஹம்சா நசர், கிரிக்கெட் வாரியத்தின் மூலம் விசா விண்ணப்பித்தபோது சமர்ப்பித்த தகவல்கள் துல்லியமாக இல்லை என்று பிசிபி தெரிவித்துள்ளது.

விசா விண்ணப்ப செயல்முறையின் போது நசர் முழுமையான மற்றும் துல்லியமான தகவல்களை வெளிப்படுத்தத் தவறியதுடன், தவறான விவரங்களை வழங்கியதும் மற்றும் முக்கிய உண்மைகளை மறைத்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த விவகாரத்தை விரிவாக ஆராய பிசிபி மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்திருந்தது. இக்குழு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை மறுஆய்வு செய்வதற்கும், தனது பரிந்துரைகளை வாரியத்திடம் சமர்ப்பிப்பதற்கும் முன்னதாக, ஹம்சா நசருக்கு தனது விளக்கத்தை அளிப்பதற்கான தகுந்த வாய்ப்பை வழங்கியது.
அதன்பின்னர், குழுவின் அறிக்கையைப் பரிசீலித்த பிசிபி, அவரை இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் நீக்கவும், அபராதம் விதிக்கவும் முடிவு செய்தது.
இது குறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறான தகவல்களை வழங்குதல், உண்மைகளை மறைத்தல் போன்ற செயல்களை வாரியம் மிகவும் தீவிரமாக அணுகுகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இத்தகைய நடத்தை பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய நபர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் தரத்திற்கு எதிரானது என்றும் வாரியம் சுட்டிக்காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications

