கொலை மிரட்டல்
டி-20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் மேத்தீவ் வேட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹசன் அலி தவறவிட்டார். இதனால் பாகிஸ்தான் தோல்விக்கு ஹசன் அலி தான் காரணம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் ஒரு சில ரசிகர்கள் ஹசன் அலியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் குற்றஞ்சாட்டி இருந்தார். தங்கள் குடும்பத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் பாதுகாப்பு வழங்கவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
புதிய ட்விஸ்ட்
இதனிடையே, தனது பெயரில் சில விஷமிகளால் போலி கணக்கு உருவாக்கப்பட்டு, தான் தெரிவிப்பது போல் கருத்து தெரிவிப்பதாக ஹசன் அலியின் மனைவி புகார் தெரிவித்துள்ளார். இது தனது சமூக வலைத்தள பக்கம் இல்லை என்றும், தனக்கு ரசிகர்கள் எவ்வித கொலை மிரட்டலும் விடுக்கவில்லை என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஆதரவு
ஹசன் அலிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் பெருமளவு ஆதரவு தான் அளித்தனர், யாரும் எதிர்க்கவில்லை என்று அவரது மனைவி கூறியுள்ளார். இதே போன்று பாகிஸ்தான் வீரர் ஷதாப் கானும், ஹசன் அலி ஒரு சாம்பியன் வீரர், ரசிகர்கள் ஹசன் அலியை திட்ட வேண்டாம் என்றும் டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
விளக்கம்
இதனிடையே, தான் கேட்ச் விட்டதால் பலரும் என் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதை அறிவேன் என்று ஹசன் அலி டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். கடுமையாக உழைத்து பாகிஸ்தானுக்காக தொடர்ந்து சேவை செய்வேன். இந்த கடினமான சூழல் தம்மை பலமான நபராக மாற்றும் என்றும் ஹசன் அலி நம்பிக்கை தெரிவித்தார்.