கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம், தனது மனைவி சானியா அஷ்ஃபாக்குடன் விவாகரத்து பெற்றுப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த பல மாதங்களாகவே இந்தத் தம்பதியினர் பிரிவது குறித்து வதந்திகள் பரவி வந்த நிலையில், வாசிம் தனது சமூக வலைதளங்கள் வாயிலாக அதை உறுதிப்படுத்தினார். நீண்ட நாளாகத் தீர்க்கப்படாமல் இருந்த கருத்து வேறுபாடுகளே இந்தப் பிரிவுக்கான முக்கியக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
"பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருந்த தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் சிக்கல்களுக்குப் பிறகு, நானும் சானியாவும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரியுள்ளோம்" என்று இமாத் வாசிம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த முடிவு மிகுந்த யோசனைக்குப் பிறகே எடுக்கப்பட்டதாகவும், தீர்க்க முடியாத பிரச்சனைகளின் காரணமாகவே இருவரும் வெவ்வேறு வழியில் சென்று அவரவர் வாழ்க்கையைத் தொடர முடிவெடுத்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.

இந்தச் சூழ்நிலையில், தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இமாத் வாசிம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, தம்பதியினரின் பழைய புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார். "எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளித்து, பழைய காதல் புகைப்படங்களைச் சமூக வலைதளங்களில் பகிர வேண்டாம். இனி அவரை எனது மனைவி என்று குறிப்பிடுவதையும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று வாசிம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இமாத் வாசிம் இந்த விவாகரத்து குறித்து எந்தவொரு தவறான தகவல்களையோ அல்லது ஊகங்களையோ நம்பவோ, பரப்பவோ வேண்டாம் என்று எச்சரித்தார். "இந்தத் தனிப்பட்ட விவகாரத்தில் மற்றவர்களைத் தேவையின்றிச் சம்பந்தப்படுத்தவோ அல்லது அவதூறு செய்யவோ முயற்சிக்கும் எந்தவொரு நபரின் மீதும் தேவைப்பட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் உறுதிபட வலியுறுத்தினார். அத்துடன், தனது குழந்தைகளுக்கான ஒரு தந்தையின் கடமைகளைத் தொடர்ந்து முழுமையாகவும் பொறுப்புடனும் செய்வேன் என்றும் வாசிம் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையில், இமாத் வாசிமின் இந்த அறிவிப்புக்குப் பிறகு அவரது முன்னாள் மனைவி சானியா அஷ்ஃபாக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் நெகிழ்ச்சியான ஒரு பதிவைப் பகிர்ந்தார். "நான் ஆழ்ந்த வலியுடன் இதை எழுதுகிறேன். எனது வீடு உடைந்துவிட்டது, என் மூன்று குழந்தைகளும் தந்தையில்லாமல் தவித்துவிட்டன. அதில் ஐந்துக மாதக் குழந்தை இன்னும் தன் தந்தையால் தூக்கப்படவே இல்லை" என்று அவர் தனது மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.