இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வீரர் இமாத் வசீம், தனது முதல் திருமண விவகாரத்திற்கு பிறகு சில மாதங்களிலேயே இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். அவரது இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், இமாத் வசீமின் முதல் மனைவியான சானியா அஷ்ஃபாக் இமாத் மீது தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இமாத் தனது குழந்தையை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும், அவரை ஒரு கொலையாளியாகக் கருதுவதாகவும் சானியா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய சானியா அஷ்ஃபாக் இமாத் வசீம் 2023 டிசம்பரில் லாகூரில் தன்னை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும், அதற்கு தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

"அவர் ஒரு கொலையாளி. எனக்கு துரோகம் செய்துவிட்டார்," என சானியா இன்ஸ்டாகிராமில் கொந்தளித்து, இமாத்தை ஒப்பந்தம் செய்த PSL அணியான இஸ்லாமாபாத் யுனைடெட் மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சானியா தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "2023 டிசம்பரில், லாகூரில் எனது குழந்தையை அவர் கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவர் ஒரு கொலையாளி, அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.
அவர் எனக்குத் துரோகம் செய்துவிட்டார். இஸ்லாமாபாத் யூடைடட் அணி, ஒரு கொலையாளிக்கும் துரோகிக்கும் வாய்ப்பளித்துள்ளது. எந்த துரோகியும் கொலையாளியும் தப்பிக்க விடப்படக் கூடாது," என்று ஆவேசமாகக் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2024 டிசம்பரில் ஓய்வுபெற்ற இமாத் வசீம், தனது இரண்டாவது திருமண அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். "அல்லாஹ்வின் கருணையாலும் என் பெற்றோரின் வழிகாட்டுதலாலும், நான் இப்போது நைலாவை மணந்திருக்கிறேன். அமைதி, உறுதிப்பாடு மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான வாழ்க்கையை உருவாக்க தெளிவான நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நைலா என் வாழ்க்கையில் அமைதி, கண்ணியம் மற்றும் வலிமையைக் கொண்டு வந்துள்ளார். இந்த முடிவில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு," என்றார்.
தனது முந்தைய உறவு குறித்து இமாத், "தோல்வியடைந்த திருமண வாழ்வுக்குப் பிறகு, என் வாழ்க்கையின் கடினமான அத்தியாயங்களில் ஒன்றாகச் சென்றேன். இருந்தாலும், அந்த அத்தியாயம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதங்களான என் குழந்தைகளைக் கொடுத்தது. அவர்களை வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு நேசிக்கிறேன், அந்த அன்பு ஒருபோதும் மாறாது," என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டார்.
தனது முன்னாள் மனைவி சானியா அஷ்ஃபாக் 'குடும்பத்தைச் சிதைத்தவர்' என்று விமர்சித்த இமாத் வசீம், "என் காலதாமதமும் அமைதியும், ஒரு அப்பாவியான நபர் நியாயமற்ற முறையில் விமர்சிக்கப்பட்டு, அவர் தகுதியற்ற கண்டனத்திற்கு ஆளான ஒரு சூழ்நிலைக்கு வழிவகுத்தது. அதற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன், அந்த பாரத்தை நேர்மையுடனும் வருத்தத்துடனும் சுமக்கிறேன்," என்று தெளிவுபடுத்தினார்.