கராச்சி: ஐபிஎல் தொடரில் அடுத்த ஆண்டு விளையாடுவேன் என்ற நம்பிக்கை இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முஹமது அமீர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2009 ஆம் ஆண்டு சீசன் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட எழுதப்படாத தடை நீடிக்கின்றது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உச்சகட்ட பிரச்சனை நிலவி வரும் இந்த சூழலில் முஹமது அமீர் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார். தற்போது முகமது அமீர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு தற்போது இங்கிலாந்தில் தங்கி விளையாடி வருகிறார்.

இங்கிலாந்து குடியுரிமை பெற முகமது அமீர் முயற்சித்து வருகிறார். அடுத்த ஆண்டு முகமது அமீருக்கு அது கிடைத்துவிடும். இதன் மூலம் பாகிஸ்தான் குடியுரிமையை முஹம்மது அமீர் கைவிட்டு இங்கிலாந்து வீரராக விளையாடப் போகிறார். இதன் காரணமாக தான் ஐபிஎல் தொடரில் தம்மால் பங்கேற்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். நான் இதை வெளிப்படையாகவே சொல்கின்றேன். ஒருவேளை எனக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு பிஎஸ்எல் தொடரில் விளையாட முயற்சி செய்வேன்.
ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் என்னால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்று நினைக்கின்றேன். அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கும். இதேபோன்று அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் பி எஸ் எல் தொடரும் ஒரே நேரத்தில் நடக்காது என்று நம்புகிறேன். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் நடந்ததால் தான் psl தொடர் ஏப்ரல் மே மாதம் நடத்தப்பட்டது.
முதலில் நான் பிஎஸ்எல் தொடரில் தேர்வாகி விட்டு அதன் பின் நான் தொடரை விட்டு வெளியேறினால் நிச்சயம் எதிர்காலத்தில் அந்த தொடரில் நான் விளையாட முடியாது. எனக்கு தடை விதிக்கப்படும். இதேபோன்றுதான் ஐபிஎல் தொடரில் தேர்வாகி விட்டு என்னால் அந்த தொடரை விட்டு வெளியேவும் செல்ல முடியாது. எனவே எந்த கிரிக்கெட் அமைப்பு என்னை முதலில் தேர்வு செய்வது என்பதை பொறுத்து இருக்கிறது.
முதலில் ஐபிஎல் ஏலம் நடந்த அதில் நான் தேர்வானால் பிஎஸ்எல் தொடரில் கண்டிப்பாக நான் விளையாட மாட்டேன் என்று முகமது அமீர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது காஷ்மீரில் நடைபெற்றுள்ள துரதிர்ஷ்ட சம்பவம் காரணமாக மீண்டும் பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையே பிரச்சனை அதிகரித்திருக்கிறது. தற்போது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டினர் அனைவரும் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கிறது. அமீர் என்னதான் இங்கிலாந்து குடியுரிமையை பெற்றாலும் அவர் பாகிஸ்தான் வீரராகவே அறியப்படுவார். இதனால் முகமது அமீரின் கனவு நிறைவேற வாய்ப்பு இல்லை என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.