மும்பை: டி20 உலககோப்பையை 3வது முறையாக வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு. பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, பாராட்டி ஒரு வீடியோவைப் பகிர்ந்தார். நெருக்கடியான தருணங்களை திறம்பட கையாண்ட இந்திய அணி அதன் சமநிலை, பலத்தால் தொடரின் தனித்துவமான அணியாகத் திகழ்ந்ததென அப்ரிடி தெரிவித்துள்ளார்.
வலுவான அணிகள் பெஞ்சில் இருக்கும் வீரர்களின் பலத்தை நம்பியிருக்கும் என அப்ரிடி சுட்டிக்காட்டினார். "தங்கள் மூன்றாவது T20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு, சிறப்பான ஆட்டத்திற்காக வாழ்த்துகள்," போட்டி முழுவதும் வலுவாகத் திகழ்ந்த இந்தியா, கோப்பையை வெல்வதற்கு முழு தகுதியுடனும் இருந்தது என அப்ரிடி கூறினார்.

இறுதிப் போட்டி குறித்து அப்ரிடி பேசும்போது, முக்கியக் கட்டங்களில் வீரர்களின் சிறப்பான பங்களிப்பைச் சுட்டிக்காட்டினார். சஞ்சு சாம்சனின் அமைதியான, புத்திசாலித்தனமான இன்னிங்ஸ், அழுத்தத்தில் அவர் ஆடிய விதம் ஆகியவற்றை அப்ரிடி குறிப்பாக பாராட்டினார். "இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மாவின் ஆரம்ப அதிரடி ஆட்டமும் போட்டிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தன.

பவர்ப்ளே ஓவர்களில் நியூசிலாந்துக்குக் கிடைத்த வாய்ப்பை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அது கைநழுவியதும், இந்தியா பிடியை இறுக்கியது. பேட்டிங், பவுலிங், அசரவைக்கும் ஃபீல்டிங் எனப் போட்டியின் ஒவ்வொரு துறையிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. ஜஸ்பிரித் பும்ராவின் அபாரமான பந்துவீச்சு அணியின் வெற்றிக்கு முன்னிலை வகித்தது.
இது இந்திய கிரிக்கெட்டிற்குப் பெருமைமிக்க தருணம்" என அப்ரிடி தெரிவித்தார்.. இத்தகைய ஆட்டங்கள், உலகப் போட்டிகளில் இந்திய அணி ஒரு ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக ஏன் தொடர்கிறது என்பதை உணர்த்தின என்று பாராட்டியுள்ளார். அப்ரிடியின் கருத்துகள் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை பெற்றுள்ளது. பலரும் அப்ரிடிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். ஆனால் அப்ரிடியின் சமூக வலைத்தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.