லாகூர்: இந்திய கிரிக்கெட் அணியில் சிலர் தாங்கள் இந்தியர்கள் என நிரூபிக்க போராடுவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி விமர்சித்து இருக்கின்றார். இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக இரு நாட்டுக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரித்து இருக்கிறது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஸ் லீக் தொடரில் யுவராஜ் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இருந்து ஒவ்வொரு வீரர்களும் விலகினர்.

இதற்கு ஒரு மாதம் கழித்து அப்ரிடி தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். அதில்," நான் எப்போதுமே கிரிக்கெட்டை அரசியலுடன் கலக்க மாட்டேன். கிரிக்கெட் என்ன நடந்தாலும் விளையாடப்பட வேண்டும். கிரிக்கெட் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும் என நான் நம்புகிறேன்."
"இங்கிலாந்தில் உலக சாம்பியன்ஸ் லெஜன்ட் தொடர் நடைபெற்ற போது, இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்ப்பதற்காக ரசிகர்கள் டிக்கெட்களை அதிக அளவு வாங்கி இருந்தனர். வீரர்களும் இந்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டனர். ஆனால் திடீரென்று நாங்கள் விளையாட மாட்டோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்."
"நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்கு சத்தியமாக புரியவில்லை. இதற்கு காரணம் யார் என்று நான் சொன்னால், அந்த வீரரின் தனிப்பட்ட வாழ்வு மிகவும் கடினம் ஆகிவிடும். ஆனால் அந்த வீரரை நான் கெட்ட முட்டை என்று சொல்கிறேன். அந்த அணியின் கேப்டன் கூட உங்களுக்கு விளையாட விருப்பம் இல்லை என்றால் விளையாட வேண்டாம்."
"அதனை சமூக வலைத்தளத்தில் ஏன் பதிவிட வேண்டும் என்று கூறியிருந்தார். சில வீரர்கள் தங்கள் தனிப்பட்ட நோக்கத்துடன் தான் இந்த தொடரில் இருந்து விலகினார்கள். இதனால் தான் அவர்களை நான் கெட்ட முட்டை என்று கூறுகின்றேன். இந்திய அணியில் உள்ள சில இந்திய வீரர்கள் பிறந்ததிலிருந்து நாங்களும் இந்தியர்கள் தான் என்று நிரூபிக்க போராடுகிறார்கள். இந்த தொடரில் இருந்து விலகியவர்கள் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு கிரிக்கெட் வர்ணனை செய்கிறார்கள். மேலும் இந்தியாவிலும் நிலைமை சரி கிடையாது. சில வீரர்களின் வீடு எரிக்கப்பட்ட சம்பவமும் நடைபெற்றிருக்கிறது"என்று ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.