மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மூன்று ஐசிசி கோப்பையை வென்று தந்த தோனி சர்வதேச ஒரு நாள் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் தோனி மிக எளிதாக இந்த இடத்திற்கு வரவில்லை.
இதற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் ரயில்வேவில் பணிபுரிந்து தோனி, கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தினார்.கிரிக்கெட் மீது தீராத காதல் இருந்ததால் தொடர்ந்து கடுமையாக உழைத்து இந்திய அணியில் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்தார்.

தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எம் எஸ் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்த்தால் வாழ்க்கையில் கஷ்டப்படும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறக்கும். தோனியின் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாகிஸ்தான் வீரர் ஒருவர் தமது கிரிக்கெட் கனவை மீண்டும் துரத்தி தற்போது தேசிய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
27 வயதான உஸ்மான் தாரிக் சுழற் பந்துவீச்சாளராக இளம்வயதில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார். ஆனால் அவருக்கு கையில் பிறக்கும் போதே எலும்பு வடிவல் வித்தியாசமாக இருந்திருக்கிறது. இதனால் அவருடைய பந்துவீச்சு முறை சரியில்லை எனக் கூறி அவரை பலமுறை நிராகரித்து இருக்கிறார்கள். இதனால் கிரிக்கெட்டை விட்டு விட்டு துபாயில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து இருக்கிறார்.
அப்போதுதான் தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தை அவர் பார்த்திருக்கிறார். தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து உடன் அது அவருடைய நம்பிக்கையை மேலும் அதிகரித்து இருக்கிறது. இதை அடுத்து தனது துபாய் பணியை விட்டுவிட்டு நேரடியாக பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட்டில் மீண்டும் கவனம் செலுத்துகிறார்.
கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக 2025 கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 20 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இதை அடுத்து பாகிஸ்தான் தேசிய அணியில் முதல்முறையாக உஸ்மான் இடம் பிடித்துள்ளார். தமது வாழ்க்கை வேறு திசைக்கு சென்றிருக்கும் என்றும் தோனியின் வாழ்க்கை வரலாறால்தான் மீண்டும் கிரிக்கெட் பக்கம் வந்ததாகவும் அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.