லாகூர் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம், கடந்த 16 டெஸ்டில் ஒருமுறை கூட அரை சதம் அடிக்கவில்லை. இந்த சூழலில் வரும் அக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் இங்கிலாந்தை மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் எதிர்கொள்கிறது.
பாகிஸ்தான் அணிக்காக 54 சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் விளையாடி உள்ள பாபர் அசாம், 3962 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒன்பது சதம், 26 அரை சதம் அடங்கும். பாபர் அசாமின் சராசரி 44.51 என்ற அளவில் இருக்கிறது. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 117 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 5729 ரன்கள் குவித்திருக்கிறார்.

இதில் 19 சதம், 32 அரை சதம் அடங்கும். பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஒரு நாள் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் தற்போது பெற்றிருக்கிறார். இதேபோன்று சர்வதேச t20 கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் அசாம் 4,145 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதம், 36 அரைசதம் அடங்கும்.
இதிலும் பாபர் அசாம் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சர்வதேச அளவில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு பிறகு மூன்றாம் இடத்தில் இருக்கிறார். ஆனால் பாபர் அசாம் தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தடுமாறி வருகிறார். இந்த சூழலில் சாம்பியன்ஸ் கப் என உள்நாட்டு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் தொடரில் பாபர் அசாம் 76 ரன்கள் குவித்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு t20 உலக கோப்பையை வென்று தந்த யூனிஸ் கான் பேசுகையில், பாகிஸ்தான் வீரர்கள் பேசுவதை விட செயலில் காட்டினால் நல்லது என்று கூறியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், பாபர் அசாம் உள்ளிட்ட மற்ற வீரர்கள் களத்தில் சரியாக செயல்பட்டு இருந்தால் நமக்கு தேவையான முடிவுகள் கிடைத்திருக்கும்.
ஆனால் நான் கவனித்ததை வைத்து பார்க்கும் போது நமது வீரர்கள் செயல்படுவதை விட பேசுவதை தான் அதிகம் விரும்புகிறார்கள். அவர்கள் வாய் மட்டும்தான் செயல்படுகிறது. ஆனால் விராட் கோலியை பாருங்கள். யாரும் சொல்வதற்கு முன்பாகவே தானே கேப்டன் பதவியை விட்டு விலகி தற்போது உலகம் முழுவதும் பல ரெகார்டுகளை அவர் படைத்திருக்கிறார்.
இதன் மூலம் நாட்டுக்காக விளையாடுவது தான் முதன்மையான விஷயம் என்பதை விராட் கோலி வெளி காட்டுகிறார். முதலில் நாட்டுக்காக விளையாடிவிட்டு பின் வேண்டுமானால் சக்தி இருந்தால் உங்களுக்காக விளையாடிக் கொள்ளுங்கள். என்னுடைய அறிவுரை எல்லாம் பாபர் அசாம் கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். தன்னுடைய செயல்பாட்டை அவர் அதிகப்படுத்த வேண்டும். அணியிலே சிறந்த வீரர் என்ற முறையில் தான் பாபர் அசாம் கேப்டன் பதவிக்கு வந்தார்.
பாபர் அசாம் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. எனவே அவர் கிரிக்கெட்டில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ரன்கள் குவிக்க வேண்டும். சமூக வலைத்தளத்தை புத்திசாலித்தனமாக பயன்படுத்துங்கள். சமூக வலைத்தளத்தில் யாருக்கும் பதில் சொல்லாதீர்கள்.உங்களுடைய செயல்பாடுகள் மூலம் பதில் சொல்லுங்கள்.உங்களுடைய உடல் தகுதியை நீங்கள் மேம்படுத்துங்கள். போட்டிக்காக தயாராகும் விதத்தில் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால் வாய்ப்பு என்பது அடிக்கடி உங்கள் கதவை தட்டாது என்று யூனிஸ்கான் கூறியுள்ளார்.