லாகூர் : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பொறுத்தவரை இந்திய அணியில் அதிக முறை முச்சதம் அடித்த வீரர் என்றால் அது சேவாக் தான். குறிப்பாக பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தான் சேவாக் முதல் முறையாக முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
இதனால் ரசிகர்கள் சேவாக்கை சுல்தான் ஆப் முல்தான் என்று அன்புடன் அழைப்பார்கள். பாகிஸ்தான் வீரர்களை களத்தில் பலமுறை ஷேவாக் கதற விட்டிருக்கிறார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் வேக பந்துவீச்சாளர் நவீத் உல் ஹக் சேவாக்கை வம்புக்கு இழுக்கும் விதமாக பேசியிருக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,இந்திய கிரிக்கெட் அணியிலே சேவாக்கின் விக்கெட்டை மிகவும் எளிதாக கைப்பற்றி விடலாம். ஆனால் ராகுல் டிராவிட்டுக்கு தான் பந்து வீசுவது மிகவும் கடினமாக இருக்கும். ஒரு முறை டெஸ்ட் போட்டி ஒன்றில் ஷேவாக் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்த இன்னிங்ஸில் அவர் 85 ரன்கள் அடித்து இருந்தார் என நினைக்கிறேன். இந்திய அணி 300 ரன்கள் அருகே குவித்திருந்தது. அனைத்து பவுலர்களையும் சேவாக் அடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கேப்டன் இன்சாமம் உல் ஹக்கிடம் சென்று என்னிடம் பந்தை கொடுங்கள். நான் சேவாக் விக்கெட்டை வீழ்த்துகிறேன் என்று கூறினேன். பந்து என்னிடம் வந்தவுடன் ஒரு ஸ்லோ பவுன்சரை வீசினேன்.அதன் பிறகு சேவாக்கிடம் சென்று உனக்கு இது கூட எப்படி விளையாட வேண்டும் என்று தெரியவில்லை.

நீ எல்லாம் பாகிஸ்தானில் பிறந்திருந்தால் உன்னால் எங்களுடைய தேசிய அணியில் இடம் கூட பிடித்து இருக்க முடியாது என்று கூறி வெறுப்பேத்தினேன். இதனால் ஷேவாக் கடுப்பாகி என்னை பதிலுக்கு ஏதோ திட்டினார். அப்போது நான் இன்சாமமிடம் இந்த பந்தில் சேவாக் அவுட் ஆகி விடுவார் பாருங்கள் என்று கூறி அதை போல் ஒரு ஸ்லோ பந்தை வீசினேன்.
அதை வேகமாக அடிக்க முயன்று ஷேவாக் கேட்ச் ஆனார். அந்த விக்கெட் அந்த ஆட்டத்தின் மிக முக்கியமானதாக இருந்தது. இதன் மூலம் நாங்கள் வெற்றி பெற்றோம்.ஒரு வேகப்பந்து வீச்சாளராக இப்படி சில யுத்திகளை பயன்படுத்த வேண்டியது இருக்கிறது என்று நவீத் உல் ஹக் கூறினார்.