ஐதராபாத் : வாழ்க்கை ஒரு வட்டம், மேலே இருப்பவர் கீழே வருவார். கீழே இருப்பவர் மேலே செல்வார் என்பது பிரபல திரைப்படத்தின் இடம்பெற்றிருக்கக்கூடிய வசனம். தற்போது அது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜாவுக்கு கச்சிதமாக பொருந்தி விட்டது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக ரமீஸ் ராஜா செயல்பட்டபோது அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார். மேலும் ஆசிய கோப்பையை பாகிஸ்தான் நடத்தவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

ரமீஸ் ராஜாவின் இந்த கருத்தால் உலக கோப்பை நடைபெறுமா இல்லையா என்ற அளவுக்கு குழப்பம் ஏற்பட்டது. எப்போதுமே ஒரு ஆண்டுக்கு முன்பாகவே உலகக் கோப்பை அட்டவணை வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் வருமா வராதா என்ற குழப்பத்தினாலேயே உலகக்கோப்பை அட்டவணை தயார் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு கிரிக்கெட் தொடர்பான விஷயங்களிலிருந்து ரமீஸ் ராஜா ஓரம் கட்டப்பட்டார். அதன் பின் ஆசிய கோப்பை நடத்துவதில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தானும் ஒப்புக்கொண்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறிக்கொண்டு, பாகிஸ்தான அணி உலக கோப்பைக்கு செல்லாது என பல வசனங்களை கூறி வந்த ரமீஸ் ராஜா தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிவதற்காக இந்தியா வந்துள்ளார். இதை பார்த்ததும் இந்திய ரசிகர்களுக்கு ஷாக் ஆனது.
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு வரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பதற்கு எதிராக பேசிவிட்டு தற்போது அவரே இந்தியாவுக்கு வந்து உலகக் கோப்பை தொடரில் சாதாரண கிரிக்கெட் வர்ணனையாளராக பணிபுரிகிறாரே என்று பலரும் அவரை கிண்டல் அடித்து வருகிறார்கள். மேலும் பலரும் பதவி வரும்போது பணிவு வேண்டும் என்பதை ரமீஸ் ராஜாவின் வாழ்க்கையை பார்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள்.