மும்பை: டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் வெளியேறியதையடுத்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அக்விப் ஜாவேத், அணியை ஆதரித்துப் பேசியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடர்ச்சியான சிக்கல்களும், மழையால் பாதிக்கப்பட்ட போட்டிகளுமே அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் போனதற்கு முக்கிய காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் சூப்பர் எட்டுச் சுற்றில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, தற்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வாளரான அக்விப் ஜாவேத், தனது அணியைப் பாதுகாக்கும் விதமாகப் பேசினார்.

இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் அடைந்த பெரிய தோல்வி, பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்விப் ஜாவேத் "இந்தியா, பாகிஸ்தான் போட்டிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை; நாங்கள் உணர்வுபூர்வமாக மிகவும் பாதிக்கப்படுகிறோம். ஆனால், இன்றுவரை எங்களால் அவர்களை வீழ்த்த முடியவில்லை. 8-0 என்பதுதான் பதிவு."

"1975 முதல் 2026 வரை உலகின் சிறந்த கேப்டன்கள் இந்தப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். 1980கள், 1990கள், 2000கள் என பல தசாப்தங்களின் வீரர்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் முடிவு இன்னும் 8-0 தான்" என்றார்.ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா வரலாற்று ரீதியாக பாகிஸ்தானுக்கு எதிராக 8-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையில், பாகிஸ்தான் ஒரு வெற்றியை மட்டுமே இந்தியாவுக்கு எதிராகப் பெற்றுள்ளது. அதுவும் 2021 பதிப்பில் கிடைத்தது. உலகளாவிய போட்டிகளில் இந்த வடிவத்தில் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக 8-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
"நாங்கள் இரண்டாவது சுற்றுக்கு வந்த பிறகு, ஒரு போட்டி மழையால் ரத்தானது. அதன்பிறகு ஒரு போட்டியில் தோற்றோம். வேறு எதுவும் நடக்கவில்லையே?" என்று ஜாவேத் கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானின் தொடக்கச் சூப்பர் எட்டுப் போட்டியான நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், அவர்களுக்கு முக்கியமான புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சல்மான் அலி ஆகா தலைமையிலான அணி, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்திடம் குறைந்த ரன் வித்தியாசத்தில் தோற்றது. இலங்கைக்கு எதிரான இறுதிச் சூப்பர் எட்டு ஆட்டத்தில், அரையிறுதிக்குத் தகுதிபெற பாகிஸ்தான் குறைந்தபட்சம் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டியிருந்தது. ஆனால், அந்த இலக்கை அடைய அணியால் முடியவில்லை.

இதனை சுட்டிக்காட்டிய அவர், "அந்தப் பிட்ச்சில் இலங்கைக்கு எதிராகத் தேவைப்பட்ட ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்று நான் நினைக்கவில்லை. நிகர ரன் ரேட் காரணமாக நாங்கள் அரையிறுதிக்குத் தகுதி பெறவில்லை. இது ஒரு பிரச்சனைதான், ஆனால் நமது கிரிக்கெட் அழிந்துவிட்டது என்றும், நாம் யாருக்கும் பயன்பட மாட்டோம் என்றும் சொல்லும் அளவுக்குப் பெரிய பிரச்சனை அல்ல."