கராச்சி: டி20 உலகக்கோப்பை தொடர் மற்றும் இங்கிலாந்து டி20 தொடரின் போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி கடுமையாக நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அணி நிர்வாகம் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் வெளியேறியதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் புயல் வீசி வருகிறது. ஒரு பக்கம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் கேப்டன்சி விவகாரன், இன்னொரு பக்கம் பயிற்சியாளர்கள் விவகாரம், வீரர்களின் ஃபிட்னஸ், தேர்வுக் குழுவினர் நீக்கம் என்று ஏராளமான சர்ச்சைகள் நடந்து வருகின்றன.

இதனிடையே அனைத்து சர்ச்சைகளையும் ஓரம்கட்டும் வகையில் ஷாகின் அப்ரிடி சர்ச்சை உச்சத்தில் உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரின் போது பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனிடம் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் ஷாகின் அப்ரிடி எல்லை மீறி நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் குழுவில் உள்ள அஸார் மஹ்மூத்துடனும் கடினமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரின் போதே கேரி கிர்ஸ்டன், நேரடியாக ஷாகின் அப்ரிடி மீது புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும் பாகிஸ்தான் அணி மேலாளர் மற்றும் பிசிபி நிர்வாகமும் ஷாகின் அப்ரிடியிடம் இதுவரை எந்த விசாரணையும் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே டி20 உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த பின் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற்றுள்ள ஒரு அணியை அணி என்றே அழைக்க முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு பக்கம் இருக்கின்றனர் என்று பேசியது லீக்கானது. இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஷாகின் அப்ரிடியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பயிற்சியாளர்களுடன் கடுமையாக நடந்து கொண்டதன் விளைவாகவே ஷாகின் அப்ரிடி மீது ஒழுங்கீன நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ஷாகின் அப்ரிடி தனது ட்விட்டர் பக்கத்தில், பாகிஸ்தான் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் விரைவில் ஷாகின் அப்ரிடி மனைவிக்கு பிரசவம் நடக்கவுள்ளதால், விடுப்பு கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.