மும்பை: ஐசிசி டி20 உலககோப்பை 2026 தொடரில் பாகிஸ்தான் அணி வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இன்று நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி தோற்றால், உலகக் கோப்பையிலிருந்து வெளியேறும். இதனால், பாகிஸ்தானின் தலைவிதி நமீபியாவிடம் உள்ளது.
கொழும்பில் இந்திய நேரப்படி மாலை 3:00 மணிக்கு இந்த மோதல் தொடங்குகிறது. 2009 டி20 உலகக் கோப்பை சாம்பியனான பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவிடம் 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்குச் சரிந்தது.

தற்போது, அமெரிக்கா 4 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், பாகிஸ்தான் 3 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. நமீபியாவிடம் தோற்றால், குறைந்த நிகர ரன் விகிதம் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதிபெற முடியாது.
மழை காரணமாக கொழும்பில் போட்டி கைவிடப்பட வாய்ப்புள்ளதும் ஒரு திருப்பமாகும். அப்படி நடந்தால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அந்நிலையில், பாகிஸ்தான் அணி குழு A புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற வாய்ப்பு உருவாகும். இதனால் மழை பெய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையில் பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தான் நமீபியாவிடம் தோற்றாலும், அது அமெரிக்காவின் சூப்பர் 8 சுற்று இடத்திற்கு முழு உத்தரவாதம் அளிக்காது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா – நெதர்லாந்து போட்டி முடிவிற்காக அமெரிக்கா காத்திருக்க வேண்டும். அகமதாபாத்தில் நெதர்லாந்து அணி இந்தியாவை பெரிய வெற்றி வித்தியாசத்தில் வென்றால், ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும் 4 புள்ளிகளுடன் சுற்றை நிறைவு செய்யும்.
அப்போது, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளில் சிறந்த நிகர ரன் விகிதம் யாருக்கு இருக்கிறது, அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறுவார்கள். ஏ பிரிவிலிருந்து இந்தியா ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. பாகிஸ்தான் Super 8 சுற்றுக்கு முன்னேறினால், அங்கு நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை போன்ற பலம் வாய்ந்த அணிகளை எதிர்கொள்ளும். சவால்கள் காத்திருக்கின்றன.