துபாய்: இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2025 ஆசிய கோப்பை போட்டி முடிந்துவிட்ட நிலையில் இந்திய அணி மீது பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது. இந்தப் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. போட்டி முடிந்த பிறகு, இந்திய வீரர்கள் தங்களுடன் கைகுலுக்க மறுத்ததாகக் கூறி, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஆசிய கோப்பை குரூப் சுற்றுப்போட்டி முடிந்த அன்று இரவு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய வீரர்களின் செயல் விளையாட்டு வீரர் உணர்வுக்கு எதிரானது என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக டாஸ் நிகழ்வின் போது போட்டி ரெப்ஃரீ ஆன்டி பைகிராப்ட் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம், இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுடன் கைகுலுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும், போட்டி முடிந்த பின்னர் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்து விட்டதாகவும் சுட்டிக் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் அணி மேலாளர் நவீத் சீமா வலுவான புகாரை பதிவு செய்துள்ளார். இது விளையாட்டு வீரர் உணர்வுக்கு எதிரானது மற்றும் கிரிக்கெட்டின் மாண்புக்கு முரணானது என்று கருதப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுபுறம், இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், கைகுலுக்க மறுத்தது ஒரு தனிப்பட்ட முடிவு அல்ல, அது ஒரு அணி எடுத்த முடிவு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "நாங்கள் ஒரு அணியாக இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம், அதற்கான பதிலை நாங்கள் களத்தில் கொடுத்துள்ளோம். சில விஷயங்கள் விளையாட்டு வீரர் உணர்வையும் தாண்டியவை. இந்த வெற்றியை நாங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' நடத்திய நமது ராணுவப் படைகளுக்கும், பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் சமர்ப்பிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்தத் தொடரில், சூப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் மீண்டும் இரண்டு முறை மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளதால், இந்தச் சர்ச்சை மீண்டும் தலைதூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. களத்தில் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திய இந்தியா, களத்திற்கு வெளியேயும் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தானின் புகாருக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் என்ன பதில் அளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் உலகில் அதிகரித்துள்ளது.