பர்மிங்காம்: மழை காரணமாக டக் வொர்த் லீவிஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 7வது ஆட்டம் நேற்று பர்மிங்காமில் நடந்தது. இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு தெய்தது தென் ஆப்பிரிக்கா. துவக்க வீரர்களாக குயின்டன் டி காக், அம்லா ஆகியோர் களமிறங்கினர்.

பாகிஸ்தானின் நேர்த்தியான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி தென் ஆப்பிரிக்கா பின்னர் நிதானமாக விளையாடியது. ஆம்லா (16) ஆட்டமிழந்தார். டி காக் 33 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார்.
கேப்டன் டிவில்லியர்ஸ் டக் அவுட் ஆகி பெருத்த ஏமாற்றம் அளித்தார். டுபிளசிஸ் 26 ரன்களும், டுமினி 6 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க மறுமுனையில் நம்பிக்கை அளித்த டேவிட் மில்லர் அரை சதம் விளாசினார்.
கடைசி நேரத்தில் மோரிஸ் (28), ரபாடா (26) ஆகியோரின் விக்கெட்டுகளை ஜூனைத் கான் கைப்பற்ற, தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் சேர்த்தது. மில்லர் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்கள் வீழ்த்தினார். ஜுனைத் கான், இமாத் வாசிம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், முகமது ஹபீஸ் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் நிதானமாக ஆடத் தொடங்கியது. அஷார் அலி 9 ரன்களிலும், ஃபக்தர் 31 ரன்களிலும், ஹபீஸ் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பாபர் 31 ரன்களுடனும், மாலிக் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இருப்பினும் மழை தொடர்ந்து பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் முறையில் ஆட்டத்தை தீர்மானிக்க நடுவர்கள் முடிவுசெய்தனர். அதன்படி பாகிஸ்தான் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.