மும்பை: இந்திய அணி முன்னாள் கேப்டன் தோனியை போல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமும் மாற்றங்களை செய்யும் மனநிலைக்கு மாற வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 5 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதனால் கேப்டன் பாபர் அசாம் பதவி விலக்கோரி ஏராளமான முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கத்தின் சிஸ்டம் மாற்றாமல், கேப்டனை மாற்றி எந்த பிரயோஜனமும் இல்லை என்று கூறியிருந்தார்.

பிசிபி-யின் அணுகுமுறையை மாற்றாமல் பாகிஸ்தான் அணியால் எந்த கோப்பையையும் வெல்ல முடியாது என்று பாபர் அசாமிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரமீஸ் ராஜாவுக்கு முன்னாள் வீரர் முகமது ஆமிர் பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து முகமது ஆமிர் பேசுகையில், என்னை பொறுத்தவரை கேப்டன்சி என்பது முக்கியமான ஒன்றாகும். பிசிபியின் அணுகுமுறை என்ன இடிக்க முடியாத சுவரா? 5 முதல் 6 நிர்வாகிகள் இணைந்து பாகிஸ்தான் கிரிக்கெட்டை வழிநடத்தி வருகின்றனர்.
இதே பிசிபி சிஸ்டத்தின் கீழ் தான் 1992ல் இம்ரான் கான் உலகக்கோப்பையை வென்றார். 2009ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும் இதே சிஸ்டத்தின் கீழ் தான் ஷாகித் அப்ரிடி மற்றும் சர்ஃபராஸ் அஹ்மத் வென்றனர். கடந்த 4 ஆண்டுகளாக பாபர் அசாம் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த அணியை கட்டமைத்தது பாபர் அசாம் தான். உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியும் மோசமாக விளையாடியது. அப்படியென்றால் இங்கிலாந்து மொத்தமாக அடிப்படையில் இருந்து மாற்றங்கள் செய்ய வேண்டுமா என்ன?
2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி மோசமாக தோல்வியடையும் போது இயன் மோர்கன் தலைமையில் 25 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, 2019ஆம் ஆண்டு கோப்பையை வென்றார்கள். அப்போதும் இதே சிஸ்டம் தான் இங்கிலாந்து அணியிடம் இருந்தது. ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தோல்விகளை சந்தித்த போது, கேப்டன்சியை பென் ஸ்டோக்ஸ் மேற்கொண்ட போது இங்கிலாந்து அணி அபார வெற்றியை பெற்றது. பிரச்சனை சிஸ்டத்திலோ, நிர்வாகத்திலோ இல்லை. கேப்டன்சி என்ற அணுகுமுறையில் உள்ளது.
தோனி எப்படி இந்திய கிரிக்கெட்டை மாற்றினார் என்று பாருங்கள். அவர் நிர்வாகத்திலோ, அடிப்படையிலோ எந்த மாற்றங்களையும் செய்யவில்லை. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் எத்தனை நாட்களுக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள் என்ற மக்கள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா தான். கேப்டனின் மனநிலை மாறாமல் நிர்வாகத்தையோ சிஸ்டத்தையோ குறைகள் சொல்லி பயனில்லை என்று கூறியுள்ளார்.