மும்பை: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை எதிர்த்து விளையாட மாட்டோம் என்ற தனது முடிவிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கண்டிப்பாக பின்வாங்கும் என்று முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். பிப்ரவரி 15 ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர் பிரேமதாசா மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது.
ஆனால், லீக் சுற்றில் இந்தியாவிற்கு எதிராக சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி களமிறங்காது எனத் தெரிவித்தது. இதற்கு ஐசிசி உடனடியாக பதிலளித்து, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவோம் என்று தெரிவித்தது. இதன் காரணமாக, பாகிஸ்தானுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று ஐசிசி எச்சரிக்கை விடுத்தது.

இந்தக் கடுமையான விளைவுகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் தனது முடிவிலிருந்து ஒரு 'இயூ-டர்ன்' எடுக்கும் என அஸ்வின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அஸ்வின், த “இந்தியா, பாகிஸ்தான் போட்டி 100 சதவீதம் நடக்கும். உண்மையில், அடுத்த 2, 3 அல்லது 4 நாட்களில், அவர்கள் தங்கள் புறக்கணிப்பு முடிவை மாற்றுவார்கள் என்பது எனது கணிப்பு,” என்றார்.
“நான் இந்தியா, பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க விரும்புகிறேன். இதில் நிறைய வணிக ரீதியான முடிவுகள் உள்ளன. இத்தனைக்கும் பிறகு, பிப்ரவரி 15 அன்று பாகிஸ்தான் அவர்களுடன் விளையாட முடிவு செய்தால், அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?” எனக் கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தானின் இந்த முடிவை “பல வழிகளில் ஏற்றுக்கொள்ள முடியாதது” என அஸ்வின் கடுமையாக விமர்சித்தார். கடந்த காலங்களில் (2003 ஒருநாள் உலகக் கோப்பை உட்பட) அணிகள் போட்டிகளைப் புறக்கணித்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார். பாதுகாப்பு காரணங்களால் மட்டுமே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் அவ்வாறு செய்தன. பாகிஸ்தானின் தற்போதைய நோக்கம் வேறானது என்றார்.
“பாகிஸ்தான் இதனால் பெரும் இழப்புகளைச் சந்திக்கும். ஒளிபரப்பாளர்களுக்கும் இழப்பீடு செலுத்த நேரிடும், அது சாத்தியமில்லை. பாகிஸ்தான் சமரசம் செய்துகொள்ள வேண்டும். இந்தியாவுக்கு எதிராக வேறு நாட்டில் விளையாட இடம் கிடைத்துள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட எதிரணியுடன் விளையாட மாட்டேன் என்பது பல வழிகளில் ஏற்கத்தக்கதல்ல. நல்லறிவு மேலோங்கும் என்று நம்புகிறேன்,” என்றார் அஸ்வின்.
இரு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே இதுவரை பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. பிப்ரவரி 4 அன்று அயர்லாந்திற்கு எதிரான பயிற்சி ஆட்டத்திற்காக பாகிஸ்தான் அணி ஏற்கெனவே இலங்கைக்கு வந்துவிட்டது.டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, பிப்ரவரி 7 சனிக்கிழமை கொழும்பில் நெதர்லாந்தை பகல் ஆட்டத்தில் எதிர்கொள்ளவுள்ளது.