லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், அதிக கேட்ச் விட்ட அணிகள் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா கடைசி இடத்திலும் இருக்கிறது.
உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 45 போட்டிகளில் நேற்று வரை 30 போட்டிகள் முடிவடைந்துள்ளது. புள்ளிப்பட்டியலில் தலா 6 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. அரையிறுத்திக்கு முன்னேறும் அணிகள் என்று பார்த்தால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
நான்காவதாக உள்ளே நுழைவதற்கு இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையே போட்டி இருக்கும். அடுத்து வரக்கூடிய போட்டிகளின் முடிவுகளை பொறுத்தே வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவுகள் அணிகளின் நிலை தெரியவரும். ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இனிமேல் அரையிறுதி வாய்ப்பு இல்லை.

இந்நிலையில், நேற்று வரை நடந்து முடிந்த 30 போட்டிகளிலும் மோசமான பீல்டிங் என்ற வகையில் அதிக கேட்ச் கோட்டை விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலை ஐசிசி வெளியிட்டு இருக்கிறது.
அதில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி இதுவரை மொத்தம் கிடைத்த 26 கேட்ச்களில் 14 கேட்ச்களை கோட்டை விட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் அடிப்படையில் இது 35 சதவிகிதமாகும்.
இங்கிலாந்தோ மொத்தம் கிடைத்த 42 கேட்ச்களில் 10 கேட்சுகளை கோட்டை விட்டிருக்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பட்டியலின் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இந்திய அணி 15 கேட்சுகளில் ஒன்றை மட்டுமே கோட்டைவிட்டுள்ளது. அதனால், பட்டியலில் கடைசி இடத்தில் இந்தியா உள்ளது.